சுவாதி கொலை வழக்கு: ராம்குமாரின் கையெழுத்தை ஒப்பிட்டு பார்க்க கோர்ட் அனுமதி
சென்னை: சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ராம்குமாரின் கையெழுத்தை ஒப்பிட்டு பார்க்க எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வரும் 17-ம் தேதி நேரில் ஆஜராகும்படி நீதிமன்ற உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
கடந்த ஜூன் 24ம் தேதி சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் வைத்து கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார் மென் பொறியாளர் சுவாதி. இந்தக் கொலை தொடர்பாக நெல்லை மாவட்டம், செங்கோட்டை அருகே உள்ள மீனாட்சிபுரத்தை சேர்ந்த ராம்குமார் என்ற இளைஞரைக் போலீசார் கைது செய்தனர்.
ராம்குமாரை கைது செய்ய போலீசார் முயன்றபோது அவர் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து நெல்லையிலும் சென்னை ராயப்பேட்டை மருத்துவமனையிலும் ராம்குமாருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவரை புழல் சிறையில் அடைத்தனர். சிகிச்சைக்குப் பின்னர் ராம்குமார் வாக்குமூலம் அளித்தபோது, தான் கொலை செய்ததை ஒப்புக்கொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
ராம்குமாரை ஏற்கெனவே போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். அப்போது நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்துக்கு அழைத்துச் சென்று கொலை சம்பவம் தொடர்பாக நடித்துக் காட்ட வைத்து வீடியோ எடுத்தனர். இதேபோல் பிலால் மற்றும் சுவாதியின் தோழிகள் 5 பேரிடம் நீதிபதி முன்னிலையில் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், ராம்குமாரின் கையெழுத்தை ஒப்பிட்டுப் பார்ப்பதற்கு முடிவு செய்த காவல்துறை, இது தொடர்பாக எழும்பூர் நீதிமன்றத்தில் இன்று அனுமதி கேட்டது. இதற்கு அனுமதி அளித்த எழும்பூர் நீதிமன்றம், வரும் 17-ம் தேதி ராம்குமாரை ஆஜர்படுத்த உத்தரவிட்டுள்ளது. 17-ம் தேதி ராம்குமார் நீதிபதி முன்னிலையில் கையெழுத்திட வேண்டும் என்றும் அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.