தமிழகத்தின் பல பகுதிகளில் இன்றே ரம்ஜான் கொண்டாடப்பட்டது!
சென்னை: தமிழகத்தில் நாளை ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என்று தமிழக அரசின் தலைமை காஜியார் நேற்று அறிவித்திருந்த நிலையில் பல பகுதிகளில் இன்றே பண்டிகை கொண்டாடப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் பிறை தெரிந்ததாக பலரும் கூறியுள்ளனர். ஆனால் இதைக் கணக்கில் கொள்ளாமல் தமிழக அரசின் தலைமைக் காஜியார் தன்னிச்சையாக நாளை கொண்டாடப்படும் என அறிவித்து விட்டதா தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பு குற்றம் சாட்டியிருந்தது. மேலும் இன்றே ரம்ஜான் கொண்டாடப்படும் என்றும் அது அறிவித்தது.
அதன்படி கோவை, கன்னியாகுமரி, சென்னை உள்பட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் இன்றே ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டது. இதையொட்டி சிறப்பு தொழுகைக்கு தவ்ஹீத் ஜமாத் அமைப்பு ஏற்பாடும் செய்திருந்தது.
ரம்ஜானையொட்டி ஆயிரக்கணக்கானோர் தொழுகையில் கலந்து கொண்டனர். பின்னர் ஒருவருக்கொருவர் வாழ்த்துகளையும் பரிமாறிக் கொண்டனர்.
இருப்பினும் தமிழக அரசின் கணக்குப்படி நாளைதான் தமிழகத்தில் அதிகாரப்பூர்வமாக ரம்ஜான் கொண்டாடப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.