எத்தனை விசாரணைக் கமிஷன் வந்தாலும் கவலையில்லை- சசிகலா
எத்தனை விசாரணைக் கமிஷன் வந்தாலும் கவலையில்லை என்று அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா கூறியுள்ளார்.
சென்னை: ஜெயலலிதாவிற்கு துரோகம் இழைத்து விட்டார் ஓ.பன்னீர் செல்வம் என்று குற்றம் சாட்டியுள்ள சசிகலா, ஜெயலலிதாவின் மரணம் பற்றி விசாரணைக் கமிஷன் அமைக்கப்படும் என்று ஓ.பன்னீர் செல்வம் கூறியது வருத்தம் அளிக்கிறது என்று கூறியுள்ளார். நியூஸ் 18 தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியளித்த சசிகலா பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார்.
அமைதிப்பூங்காவாக இருந்த தமிழக அரசியல் களம் நேற்றிரவு முதல் படு பரபரப்பாக மாறியுள்ளது. செவ்வாய்கிழமை இரவு முதல் ஓ.பன்னீர் செல்வம் தனி ஒருவனாக மாறி விட்டார். எம்.எல்.ஏக்கள் இல்லை... அமைச்சர்கள் இல்லை... ஆனாலும் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், ஜெயலலிதாவின் ஆன்மாவை நம்பி சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியிருக்கிறார்.
இன்று காலை முதல் பல டிவி சேனல்களுக்கு பேட்டியளித்துள்ளார் ஓ.பன்னீர் செல்வம். இதற்கு பதிலடி தரும் விதமாக சசிகலாவும் டிவி சேனலுக்கு பேட்டியளித்துள்ளார்.
அப்போது பேசிய அவர், போயஸ்தோட்டத்தில் ஜெயலலிதாவிற்கு உடல்நலம் குன்றிய உடனே உடனடியாக அப்பல்லோ மருத்துவமனைக்கு கொண்டு சென்று விட்டோம். இங்கிருந்த அனைவருக்கும் அது தெரியும். 75 நாட்கள் நான் எப்படி கவனித்துக் கொண்டேன் என்று அங்கிருந்தவர்களுக்கு நன்றாக தெரியும் என்று சொல்லும் போதே கண் கலங்கினார் சசிகலா.
ஜெயலலிதாவின் மரணம் பற்றி விசாரணைக் கமிஷன் அமைக்கப்படும் என்று ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளது வேதனை தருகிறது. எத்தனை விசாரணைக் கமிஷன் வந்தாலும் கவலையில்லை என்று சசிகலா கூறினார்.
தொடர்ந்து பேசிய சசிகலா, ஓ.பன்னீர் செல்வத்தை ராஜினாமா செய்யுமாறு யாரும் கட்டாயப்படுத்தவில்லை என்று கூறிய சசிகலா, சட்டசபையில் துரைமுருகன் முதல்வரை பாராட்டி பேசியதற்கு அவர் எதுவுமே கூறவில்லை என்று கூறினார்.
சொத்துகுவிப்பு வழக்கு தீர்ப்பு பற்றிய கேள்விக்கு பதில் சொன்ன சசிகலா, வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் அதுபற்றி கருத்து கூற விரும்பவில்லை என்று கூறினார். தொடர்ந்து அவர், ஜெயலலிதாவிற்கு ஓ.பன்னீர் செல்வம் துரோகம் செய்து விட்டார். 33 ஆண்டுகளாக ஜெயலலிதாவை நான் கவனித்துக் கொண்டேன். அவர் விட்டுச் சென்ற பணிகளை செய்ய வேண்டும் என்பதற்காகவாவது நான் முதல்வராக பதவியேற்பேன் என்று கூறினார் சசிகலா.