சென்னையில் ஒரே நாளில் 2 கொலைகள்- ரியல் எஸ்டேட் அதிபர் கொலையில் 4 பேர் கைது
சென்னையில் மோதல் சம்பவத்தில் பழிக்கு பழியாக ரியல் எஸ்டேட் அதிபர் வெட்டிகொல்லப்பட்டார். 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருவல்லிக்கேணியில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்த வாலிபர் ஒருவர் வெட்டிகொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவம் தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
செங்கல்பட்டு அருகே உள்ள புதுப்பாக்கத்தை சேர்ந்தவர் தயா என்கிற தயாநிதி, 40. இவர் ரியல் எஸ்டேட், கட்டிட காண்டிராக்டர் தொழில் செய்துவந்தார். ஊராட்சி மன்ற தலைவர் விஜயகுமார் கொலை செய்யப்பட்ட வழக்கில் தயாநிதியும் கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்றுவந்தார்.
சொந்த ஊரில் பகை அதிகமானதால் தயாநிதி சென்னை திருவல்லிக்கேணி மாட்டாங்குப்பத்தில் குடும்பத்தினருடன் வந்து குடியேறினார். ரியல் எஸ்டேட் தொழிலில் அவருக்கு மாட்டாங்குப்பத்திலும் அவருக்கு பகைவர்கள் உருவானார்கள்.
மாட்டாங்குப்பத்தை சேர்ந்த ஸ்ரீகாந்த் என்பவருடன் மோதல் ஏற்பட்டது. சமீபத்தில் ஏற்பட்ட சண்டையில் ஸ்ரீகாந்த்தை தயாநிதி அடித்து உதைத்ததாக கூறப்படுகிறது.
வியாழக்கிழமை இரவு திருவல்லிக்கேணி பறக்கும் ரயில் நிலையம் அருகே தயாநிதி நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்குவந்த 4 மர்ம நபர்கள் தயாநிதியை சுற்றிவளைத்து அரிவாளால் வெட்டினார்கள். தயாநிதி ரத்தவெள்ளத்தில் கீழே சாய்ந்தார். அவரை வெட்டிய 4 பேரும் தப்பியோடிவிட்டனர்.
படுகாயத்துடன் உயிருக்கு போராடிய தயாநிதி ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் முதலில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். பின்னர் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அவரை கொண்டு சென்று சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை பலனளிக்காமல் வெள்ளிக்கிழமை அதிகாலையில் தயாநிதி பரிதாபமாக இறந்துபோனார். பிரேத பரிசோதனைக்காக அவரது உடல் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு மீண்டும் கொண்டு செல்லப்பட்டது.
கொலை செய்யப்பட்ட தயாநிதி மனைவியின் பெயர் ஜீவா. கணவரது உடலை பார்த்து ஜீவா கதறி அழுதார். தயாநிதியை, ஸ்ரீகாந்தும் அவரது நண்பர்கள் வினோத், பாலாஜி, சுரேஷ் ஆகியோர் தீர்த்துக்கட்டியதாக தெரியவந்தது. துணை கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் மெரினா போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன்தாஸ் கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார். கொலையாளிகள் 4 பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தலைநகரான சென்னையில் அடுத்தடுத்து கொலைகள் நடைபெற்று வருவதால் பதற்றமும் பீதியும் அதிகரித்துள்ளது.