7 பேர் விடுதலை.. மத்திய அரசுக்கு நெருக்கடி.. தமிழக அரசின் அதிரடி பரிந்துரைக்கு என்ன காரணம்?
7 தமிழர்களை விடுதலை செய்வது குறித்து இன்று தமிழக அரசு எடுத்த முடிவிற்கு பின் பல்வேறு காரணங்கள் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
சென்னை: 7 தமிழர்களை விடுதலை செய்வது குறித்து இன்று தமிழக அரசு எடுத்த முடிவிற்கு பின் பல்வேறு காரணங்கள் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு இருக்கும் 7 தமிழர்களை விடுதலை செய்வது குறித்து ஆளுநர் என்ன முடிவு எடுப்பார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அவருக்கு மத்திய அரசு ஆலோசனை வழங்கவும் வாய்ப்புள்ளது.
இன்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் முக்கிய ஆலோசனை நடத்த வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. தமிழக அரசின் இந்த பரிந்துரைக்கு பல முக்கிய காரணங்கள் உள்ளது.
காரணம் 1
தமிழக அரசுக்கு தொடர்ந்து பல விஷயங்களில் மக்கள் மத்தியில் அவப்பெயர் ஏற்பட்டு உள்ளது. தூத்துக்குடி துப்பாக்கி சூடு, காவிரி நீரை கடலில் விட்டது, சேலம் சாலை என்று பல விஷயங்களில் மக்கள் அரசுக்கு எதிராக இருக்கிறார்கள். இதனால் மக்களிடம் நல்ல பெயர் எடுக்க கடைசி அஸ்திரமாக 7 பேர் விடுதலையை பயன்படுத்த முடிவு செய்து இருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது.
காரணம் 2
நேற்று பேட்டியளித்த ஜெயக்குமார் நாங்கள் முடிவு எடுத்துவிட்டோம், இனி ஆளுநர்தான் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று கூறினார். இதனால் 7 பேர் விடுதலையில் இனி நடக்கும் விஷயம் எல்லாம் மத்திய அரசின் முடிவை பொறுத்ததே. ஆகவே, 7 பேரை விடுதலை செய்யவில்லை என்றால் அது மத்திய அரசுக்கு பெரிய அவப்பெயராக மாறும். இதனால்தான் ஆளுநரை கைகாட்டிவிட்டு அதிமுக விலகிக் கொண்டுவிட்டது என்றும் கூறப்படுகிறது.
நெருக்கடிக்கு பதில்
மத்திய அரசு சிபிஐ ரெய்டு மூலம் அதிமுகவிற்கு நெருக்கடி கொடுத்தது. ஆனால் அதற்கு பதிலடி தரும் விதமாக 7 பேர் விடுதலையில் முடிவெடுத்து, தமிழக அரசு தற்போது மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுத்துள்ளது. இதில் தமிழகத்திற்கு ஆதரவான முடிவை எடுத்தால் பிற மாநிலங்களிலும், எதிரான முடிவை எடுத்தால் தமிழகத்திலும் கடும் எதிர்ப்பை சந்திக்கும் சூழ்நிலைக்கு உள்ளாகி உள்ளது மத்திய அரசு.
காரணம் 3
தமிழக அரசியலில் எப்போது வேண்டுமானாலும் புயல் வீசும் என்ற நிலைதான் உள்ளது. 18 எம்எல்ஏக்கள் தீர்ப்பு வந்தால், ஆட்சி கவிழ கூட வாய்ப்புள்ளது. மேலும் 2019 நாடாளுமன்ற தேர்தலுடன் தமிழகத்திற்கு தேர்தல் நடக்க வாய்ப்புள்ளது என்றும் அரசியல் வல்லுநர்கள் கூறுகிறார்கள். அந்த சமயத்தில், இந்த 7 பேர் விடுதலை முக்கிய துருப்புசீட்டாக பயன்படும் என்று அதிமுக நினைக்கிறது.