திமுக போட்டி சட்டசபை விவகாரம்தான் இன்ஸ்பெக்டர் காஞ்சனா தற்கொலை முயற்சிக்கு காரணமா?
சென்னை: பலத்த பாதுகாப்புகள் நிறைந்த தமிழக சட்டசபை வளாகத்துக்குள் திருவொற்றியூர் அனைத்து மகளிர் காவல் நிலைய பெண் இன்ஸ்பெக்டர் காஞ்சனா கடந்த 2ம் தேதி சீருடையுடன் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார். இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. காஞ்சனாவின் தற்கொலை முயற்சிக்கு கூறப்படும் காரணங்களும் பல அதிர்ச்சிகளை உருவாக்கியுள்ளது.
கடந்த ஆகஸ்ட் 17ம் தேதி, எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் உட்பட 79 திமுக எம்.எல்.ஏக்கள் ஒரு வார காலத்துக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டார்கள். கடந்த ஆகஸ்ட் 19ஆம்தேதி சட்டமன்ற வளாகத்தின் நான்காம் வாயில் வழியாக சேர்கள், மைக் செட்டுகள், கையால் அடிக்கும் பெல்களோடு நுழைந்த திமுக உறுப்பினர்கள் அங்கே போட்டி சட்டசபைக் கூட்டத்தை நடத்தினார்கள். இது, அனைத்து தொலைக்காட்சிகளிலும் இரண்டு மணி நேரம் லைவ் ஆக ஒளிபரப்பாக, அதன்பின்னரே காவலர்கள் வந்து அவர்களைக் கலைந்துபோகச் சொன்னார்கள்.
அன்று திமுக உறுப்பினர்கள் நுழைந்த நான்காம் எண் நுழைவுவாயிலின் பொறுப்பு காவல் அதிகாரியாக நியமிக்கப்பட்டிருந்தவர்தான் காஞ்சனா. இது, பலத்த சர்ச்சைகளை அரசு மட்டத்தில் ஏற்படுத்த, பூக்கடை காவல் நிலைய எல்லைக்குள்தான் தமிழக சட்டமன்றம் வருகிறது. இதனால் பூக்கடை துணைஆணையர் சக்திவேலை கடலோர பாதுகாப்புக் குழுவுக்காக ராமநாதபுரத்துக்கு டிரான்ஸ்பர் செய்தது அரசு. ஆனாலும் போட்டி சட்டசபை நடந்தபோது அந்த இடத்தில், நான்காவது கேட்டுக்கு பொறுப்பான காஞ்சனாவைப் பிடித்து கேள்விமேல் கேள்வி கேட்டு டார்ச்சர் செய்து வந்துள்ளார்கள்.
மிகக் கடுமையாக நடத்தப்பட்ட அவர் கடும் மன உளைச்சலுக்கு உள்ளாகினாராம். என, கடந்த சில நாட்களாகவே சக காவலர்களிடம் காஞ்சனாவை சகட்டுமேனிக்கு டியூட்டி போட்டுடார்ச்சர் செய்ததில் மன முடைந்த அவர், சட்டமன்றத்தின் இறுதி நாளான செப்டம்பர் 2ம் தேதியன்று அனைவரின் கவனத்தை ஈர்க்கும் வகையிலேயே தீக்குளிக்க முயன்றதாகக் கூறுகின்றனர். காஞ்சனாவின் தற்கொலைக்கு மேலும் பல பின்னணி கதைகளும் கூறப்படுகின்றன.

காஞ்சனாவின் விளையாட்டு ஆர்வம்
காஞ்சனாவின் தந்தை சென்னை ஐசிஎப் ஊழியர். குத்துச்சண்டை வீரர். பயிற்சிக்கு செல்லும்போது சிறுமியாக இருந்த காஞ்சனாவை கூடவே அழைத்துச் செல்வாராம். தந்தை கொடுத்த ஊக்கத்தால் காஞ்சனா விளையாட்டு வீரராக உருவெடுத்தார். 200, 400, 1,500 மீட்டர் தடகள ஓட்டப் பந்தயங்களில் கலந்துகொண்டு வென்றுள்ளார்.

பதக்கம் வென்ற காஞ்சனா
பள்ளி, கல்லூரிகளில் ஓட்டப் பந்தயங்களில் கலந்து கொண்டு பதக்கங்களை பெற்றுள்ளார். அத்துடன் மாநில அளவிலான காவல்துறை தடகள போட்டி களிலும் 100 மீட்டர் மற்றும் 400 மீட்டர் தொடர் ஓட்டத்திலும் அசத்தி இருக்கிறார். ஆசிய அளவிலான மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன் போட்டிகளிலும் காஞ்சனா பங்கேற் றுள்ளார். பாங்காக்கில் நடந்த பந்த யங்களில் 2 தங்கம், 1 வெள்ளி, ஒரு வெண்கலம் பெற்றார்.

அங்கீகாரம் இல்லை
2008 மலேசியாவில் நடந்த போட்டிகளில் 5 பதக்கங்கள், தைவானில் 4 பதக்கங்கள், மறுமுறை மலேசியா சென்று 4 பதக்கங்களை தட்டிச் சென்றார். இதுவரை 300-க்கும் மேற்பட்ட பதக்கங்கள், சான்றிதழ்களை பெற்றுள்ளார். ஆனால், அவருக்கு காவல்துறை அதிகாரிகள் சரியான அங்கீகாரம் கொடுக்கவில்லை என்ற குறை இருந்ததாம். மேலும் அடிக்கடி இட மாறுதல் வழங்கப்பட்டுள்ளது.

சந்தித்த சங்கடங்கள்
இன்ஸ்பெக்டருக்கு கொடுக்க வேண்டிய போலீஸ் வாகனமும் வழங்கப்படவில்லையாம். இது பற்றி உயர் அதிகாரிகளிடம் முறை யிட்டும் அவர்கள் கண்டுகொள்ள வில்லையாம். இதை முதல்வர் கவனத்துக்கு நேரடியாக கொண்டு செல்ல முயன்றவர் அதற்கு வாய்ப்பு கிடைக்காததால், தற்கொலைக்கு முயன்று முதல்வர் கவனத்தை ஈர்த்திருக்கலாம் என்று அவரது தோழிகள் தெரிவித்துள்ளனர்.

அடிக்கடி பணி மாற்றம்
ஸ்போர்ட்ஸ் கோட்டா மூலம் கடந்த 1999ம் ஆண்டு காஞ்னா, ஓமலூரில் சப்-இன்ஸ்பெக்டராக காவல்துறையில் பணிக்கு சேர்ந்தார். விளையாட்டு மீது அவருக்கு அளவுகடந்த ஆர்வம் இருந்தது. பல தடகள போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களை வாங்கி துறைக்கு பெருமை சேர்த்தார். இதுவரை ஏராளமான பதக்கங்களை பெற்றுள்ளார். தற்போது தண்டையார்பேட்டையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் குடியிருந்து திருவொற்றியூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றினார்.

இன்ஸ்பெக்டருடன் மோதல்
துணிச்சலான இன்ஸ்பெக்டர் காஞ்சனா என்றே அவரை சக போலீஸ் அதிகாரிகள் அழைப்பதுண்டு. ஏனென்றால் எந்த காரியத்திலும் துணிச்சலுடன் செயல்படுவார். இதுவே அவரது இடமாறுதலுக்கு முக்கிய காரணமாக அமைந்தது. அப்படி தான் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருவொற்றியூருக்கு வந்தார். அங்கே உள்ள இன்னொரு போலீஸ் இன்ஸ்பெக்டருக்கும், காஞ்சனாவுக்கும் பணி மோதல் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

மன உளைச்சல்
அந்த இன்ஸ்பெக்டர் காஞ்சனாவுக்கு பலவகையில் தொந்தரவு கொடுத்துள்ளார். காஞ்சனாவின் ஜீப்பை எடுக்க விடாமல் தடுத்ததாகவும் அவர் மீது குற்றச்சாட்டுள்ளது. இதனால் சொந்த வாகனத்தைப் காஞ்சனா பயன்படுத்தினார். அதற்கும் சில இடையூறுகளை அந்த இன்ஸ்பெக்டர் செய்துள்ளார். இவ்வாறு பலவகையில் இடையூறு செய்த அந்த இன்ஸ்பெக்டரால் காஞ்சனா மனஉளைச்சலுக்குள்ளாகி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

விளையாட தடையா?
காஞ்சானாவிற்கு விளையாட்டில் பயிற்சி செய்ய முடியவில்லை என்ற மனக்குறையே தற்கொலை வரை கொண்டு சென்றிருக்கலாம் என்கின்றனர் அவரது தோழிகள். இதனை உயரதிகாரிகள் மறுக்கின்றனர். விளையாட்டு பிரிவின் கீழ் பணியில் சேர்ந்தவர்கள் மேற்கொண்டு அவர்கள் விளையாட் டில் ஈடுபடுவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். அவர்கள் விளையாட்டில் ஈடுபடுகின்றார்களா என்பதை அரசு தொடர்ந்து கண்காணிக்கும் என்று மாநில பள்ளிக் கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் க.பாண்டியராஜன் கூறியுள்ளார்.

டெரர் காஞ்சனாவா?
அதே நேரத்தில் காஞ்சனா வீட்டில் எல்லா வேலைகளையும் சக போலீஸ்காரர்கள் தான் செய்ய வேண்டும் என்று அவர் நிர்பந்திப்பாராம். சக பெண் போலீசாராலும் காஞ்சனாவினால் பாதிக்ப்பட்டுள்ளார்களாம். கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்த வேலை நிறுத்த போராட்டம் தொடர்பாக அதிகாரிகள் மீட்டிங் நடந்தது. அப்போது அங்கு வந்த ஒரு இன்ஸ்பெக்டரின் கார், காஞ்சனாவின் கார் முன்னால் நிறுத்தப்பட்டது. அதை பெரிதுப்படுத்தி விட்டார் காஞ்சனா. உண்மையில் சொல்லப்போனால் காஞ்சனா குற்றம் சுமத்தும் இன்ஸ்பெக்டர் பைபாஸ் சர்ஜரி செய்தவர். அவர் மீது காஞ்சனா சொல்லும் குற்றச்சாட்டுக்கள் உண்மையல்ல என்றும் கூறுகின்றனர்.

நடவடிக்கை பாயும்?
எது எப்படியோ சட்டசபையில் தற்கொலை செய்ய முயன்றதன் மூலம் ஊடகங்களின் கவனத்தைப் பெற்றுவிட்டார் காஞ்சனா. சக போலீஸ் அதிகாரியால் தொந்தரவு, பணியில் மன உளைச்சல் என்றால் அவர், உயரதிகாரிகளிடம் புகார் கொடுக்கலாம். அதற்காக தற்கொலைக்கு முயன்று காவல்துறையின் மீது களங்கத்தை ஏற்படுத்தலாமா. அவரது செயலுக்கு நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என்கின்றனர் உயரதிகாரிகள்.












Click it and Unblock the Notifications