திமுக, அதிமுக கட்சிகளை தமிழகத்தில் இருந்து அப்புறப்படுத்துங்கள்: டாக்டர் ராமதாஸ்
தஞ்சாவூர்: திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளையுமே தமிழ்நாட்டில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தொண்டர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்தியாவில் மீண்டும் வாக்குச்சீட்டு முறையை அமல்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்ட பா.ம.க. பொதுக் கூட்டம் மயிலாடுதுறையில் நடைபெற்றது. இந்தக்கூட்டத்தில் பா.ம.க. நிறுவனத் தலைவர் ராமதாஸ் கலந்து கொண்டு பேசினார், அப்போது அவர், ''கடந்த 1989 ஆம் ஆண்டு ஜூலை 16 ஆம் தேதி பா.ம.க. தொடங்கப்பட்டு, தற்போது 25 ஆண்டுகள் நிறைவு பெற உள்ளது.
1949 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட தி.மு.க. 1967 ஆம் ஆண்டு, அதாவது 18 ஆண்டுகளில் தமிழகத்தில் ஆட்சியை பிடித்தது. அன்றைக்கு தி.மு.க.விற்கு காங்கிரஸ் மட்டுமே எதிர்க்கட்சியாக இருந்தது. ஆனால், அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. ஆகிய 2 கட்சிகள் நமக்கு எதிர்க்கட்சிகளாக உள்ளன.
இரண்டு கட்சிகளையும் தமிழகத்தில் இருந்து அப்புறப்படுத்த நமக்கு காலதேவன் கட்டளையிட்டுள்ளான். அதனை செய்திட இளைஞர்களால் மட்டுமே முடியும்.
நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் 37 தொகுதிகளில் அ.தி.மு.க. வெற்றி பெற வாய்ப்பில்லை. மின்னணு வாக்கு எந்திரத்தில் தவறு நடந்துள்ளது. வளர்ந்த நாடுகளான அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட பல நாடுகளில் கூட வாக்குச்சீட்டு முறைதான் உள்ளது. எனவே, இந்தியாவில் மீண்டும் வாக்குச்சீட்டு முறையை கொண்டு வர வேண்டும்" என்றும் ராமதாஸ் வலியுறுத்தினார்.