தமிழ்நாடு முழுக்க ஒரே தண்ணியா இருக்கே ப்ரோ... யாருக்காவது வேணுமா?
சென்னை: ஐ மழை! என்று ஆச்சரியப்பட்டு ஸ்டேட்டஸ் போட்ட சென்னைவாசிகள் எல்லாம் ஐயோ மறுபடியும் மழையா என்று அச்சப்படும் அளவிற்கு பேய்மழை பெய்கிறது.
அண்ணாசாலையோ... அமிஞ்சகரையோ.... எல்லாமே வெள்ளக்காடுதான். தி.நகர் அலுவலகத்தில் இருந்து மாலை 6 மணிக்கு கிளம்பியவர்கள் மயிலாப்பூரில் உள்ள வீட்டிற்கு வந்து சேர இரவு 8 மணியாகிவிட்டது என்றால் நகரத்தில் இருந்து புறநகர் பகுதிக்கு வாகனங்களில் சென்றவர்கள் நள்ளிரவு தாண்டிதான் வீடு போய் சேர்ந்தார்களாம். அந்த அளவிற்கு திங்கட்கிழமையன்று பிற்பகலில் தொடங்கி 7 மணிவரை கொட்டித் தீர்த்தது கனமழை.
கடந்த அக்டோபர் மாதம் முதல்வாரம் வரை சென்னையில் எங்கு பார்த்தாலும் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடியது. குடிநீருக்காக மக்கள் குடத்தை தூக்கிக்கொண்டு அல்லாடினார்கள். எதிர்கட்சிகளின் போராட்டத்திற்கு சரியான ஆயுதம் கிடைத்தது. புது குடம் வாங்கிக்கொடுத்து போராட்டத்திற்கு அழைத்தார்கள்.
வாங்கடா... வாங்க எவ்ளோ தண்ணி வேணும் எடுத்துக்கங்க... என்று இயற்கை அன்னையின் கருணையினால் இப்போதோ சென்னையில் எங்கு நோக்கினும் தண்ணீராகத்தான் இருக்கிறது. ஆனாலும் என்ன பயன் அந்த தண்ணீர்தான் இப்போது சென்னைவாசிகளின் பெரும் பிரச்சினையாக இருக்கிறது.
வெள்ளத்தில் மிதந்த சென்னை மாநகரை டிவியில் பார்த்து உச்சு கொட்டிய தென்னகத்து மக்களும் இன்றைக்கு தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருக்கின்றனர். சென்னை முதல் குமரி வரை ஒரே வெள்ளக்காடுதான்... அணைகளும், ஏரிகளும், குளங்களும் நிரம்பி வழிகின்றன. உபரிநீரால் குடியிருப்புகளும் தண்ணீரில் தத்தளிக்கின்றன.
வடகிழக்குப் பருவ மழையினால் சில பகுதிகளில் பாதிப்புகள் ஏற்பட்டிருந்தாலும் தமிழகத்துக்கு பல நன்மைகள் ஏற்பட்டுள்ளன.
• சென்னை தண்ணீர் பஞ்சத்தை எதிர்நோக்கியிருந்தநிலையில் தொடர் மழையினால் நீர்த்தேக்கங்கள் அனைத்தும் நிரம்பி வழிகின்றன.
• சென்னையில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளதால் இன்னும் சில ஆண்டுகளுக்கு தண்ணீர் பிரச்சினைக்கு வாய்ப்பே இருக்காது.
• வேளச்சேரி, மடிப்பாக்கம், உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஏரிகளில் தண்ணீர் நிரம்பி அழகாய் காட்சியளிக்கின்றன.
• பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், ரெட்டேரி, சோழவரம், ஆகிய ஏரிகள் நிரம்பி கடல்போல காட்சி தருகின்றன.
• நான்கு வருடங்களுக்குப் பிறகு மதுராந்தகம் ஏரி நிரம்பியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஏரிகள் அனைத்தும் நிரம்பியுள்ளன.
• திருவள்ளூர் மாவட்டத்தில் ஏரிகள், குளங்களும், நீர் நிலைகளும் முழு கொள்ளளவை எட்டிவிட்டன. ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது.
• வறண்டு கிடந்த பாலாற்றில் 19 ஆண்டுகளுக்குப் பிறகு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது
• பல ஆண்டுகளுக்குப் பிறகு திருவண்ணாமலை சாத்தனூர் அணை நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்
• தொடர்மழையின் காரணமாக மதுரையச் சுற்றியுள்ள கண்மாய்களில் நீர் நிரம்பி வழிகிறது. வைகையில் பெருக்கெடுத்துள்ள வெள்ளத்தைப் பார்த்து மதுரைவாசிகளின் உள்ளம் பொங்குகிறது.
• வைகை, முல்லைப்பெரியாறு அணைகள் நிரம்பி வருகின்றன. தேனி மாவட்ட குளங்கள் அணைத்தும் நிரம்பி விட்டன.
• திருநெல்வேலி மாவட்டத்தில் ராமநதி, குண்டாறு, கருப்பாநதி, கடனாநதி உள்ளிட்ட 5 அணைகள் நிரம்பியுள்ளன.
• மிகப்பெரிய அணைகளான பாபநாசம், சேர்வலாறு உள்ளிட்ட அணைகள் 100 அடியை தாண்டி நிரம்பும் நிலையில் உள்ளன.
• குற்றால அருவிகளில் ஆர்பரித்துக்கொட்டும் தண்ணீரின் அழகை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசிக்கின்றனர்.
• கன்னியாகுமரி பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது
• தருமபுரி, கிருஷ்ணகிரி, திண்டுக்கல் மாவட்டங்களில் நீர் நிலைகள் நிரம்பி வழிவதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
• கரூர், விருதுநகர், இராமநாதபுரம், தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளில் பெய்த மழையினால் வறண்டு கிடந்த நீர்நிலைகளும் நிரம்பி வழிகின்றன.
• நிரம்பி வழியும், அணைகளும், ஏரிகளும் மக்களின் சுற்றுலா தலமாக மாறி வருகின்றன.