அடேங்கப்பா... தினகரனுக்காக தீவிரக் களப் பணியாற்றப் போகும் 152 தேர்தல் பொறுப்பாளர்கள்!
ஆர்.கே. நகர் இடைத்தேர்தலை முன்னிட்டு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, அமைச்சர்கள் உள்ளிட்ட 152 பேர் அடங்கிய தேர்தல் பணிக்குழுவை சசிகலா அணி அதிமுக நியமனம் செய்துள்ளது.
சென்னை: ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் சசிகலா அணியின் சார்பில் போட்டியிடும் டிடிவி தினகரனுக்காக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, அமைச்சர்கள் உள்ளிட்ட 152 பேர் அடங்கிய தேர்தல் பணிக்குழுவை அதிமுக தலைமை அலுவலகம் நியமனம் செய்துள்ளது.
ஜெயலலிதா மறைவை முன்னிட்டு காலியாக உள்ள ஆர்.கே. நகர் தொகுதிக்கு வரும் ஏப்ரல் 12ஆம் தேதி நடைபெற உள்ளது. அதிமுக இரு அணிகளாக பிளவு பட்டு வேட்பாளரை களமிறக்கியுள்ளது.
திமுக, பாஜக, தேமுதிக, நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர். ஆர். நகரில் பலமுனைப் போட்டி நிலவுவதால் அதிமுகவின் சசிகலா அணி வேட்பாளர் டிடிவி தினகரனும், ஒபிஎஸ் அணி சார்பாக போட்டியிடும் மதுசூதனனும் வென்றே ஆக வேண்டும் என்று முழு மூச்சோடு களமிறங்கியுள்ளனர்.
எடப்பாடி பழனிச்சாமி
டிடிவி தினகரன் தனக்காக தேர்தல் பணி செய்வதற்காக 152 பேர் அடங்கிய பொறுப்பாளர்களை நியமனம் செய்துள்ளார். அந்த தேர்தல் பணிக்குழுவில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, பண்ருட்டி ராமச்சந்திரன், அமைச்சர்கள் கே.ஏ. செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், எஸ்.பி. வேலுமணி, தங்கமணி, ஆகியோர் இந்த குழுவில் இடம் பெற்றுள்ளனர்.
களமிறக்கிய டிடிவி தினகரன்
சசிகலா ஒப்புதலோடு இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக அதிமுக தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது. சசிகலா ஆதரவு அணியில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள், எம்.எல்ஏக்கள் ஆகியோரை மொத்தமாக களமிறக்கியுள்ளார் டிடிவி தினகரன்.
152 பேர் நியமனம்
தேர்தல் வெற்றி சாதகமாகயில்லை என்று உளவுத்துறை எச்சரித்துள்ள நிலையில் எப்பாடு பட்டாவது ஜெயித்தே ஆக வேண்டும் என்ற எண்ணத்தில் 152 பேரை தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களாக நியமித்துள்ளார் டிடிவி தினகரன்.
டிடிவி தினகரன் தலையெழுத்து
இரட்டை இலை சின்னம் பற்றிய பஞ்சாயத்து தேர்தல் ஆணையத்தில் நடைபெற்று வருகிறது. வேட்புமனு தாக்கலுக்காக நாளை கடைசி நாளாகும். இந்த நிலையில் ஏப்ரல் 12ல் ஆர் கே. நகர் தொகுதிவாசிகள் அளிக்கும் வாக்குகளில்தான் உள்ளது டிடிவி தினகரனின் தலையெழுத்து.