தண்ணீர் லாரி மோதி பலியான 3 மாணவிகளின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி
சென்னை: கிண்டியில் தண்ணீர் லாரி மோதி மரணமடைந்த 3 மாணவிகளின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி செல்லம்மாள் கல்லூரி நிர்வாகம் சார்பில் வழங்கப்பட்டது.
சென்னை கிண்டி மேம்பாலம் அருகே தண்ணீர் லாரி மோதியதில் ஆஷாசுருதி, சித்ரா, காயத்ரி ஆகிய மூன்று கல்லூரி மாணவிகள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர். மாணவிகள் ஜெயஸ்ரீ, மீனா மற்றும் மோட்டார் சைக்கிளில் சென்ற ஓமணக்குட்டன் உள்பட 4 பேரும் காயம் அடைந்தனர்.
உயிரிழந்த மூன்று மாணவிகளின் சடலங்கள் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் இன்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. சில நிமிட நேரத்தில் நடந்த இந்த விபத்து சென்னை கல்லூரி மாணவிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செல்லம்மாள் கல்லூரி மாணவிகள்
சென்னை புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் ஆஷாசுருதி, 19. இவர், கிண்டி செல்லம்மாள் கல்லூரியில் பி.காம் 2ம் ஆண்டு படித்து வந்தார். திருவொற்றியூரைச் சேர்ந்தவர் சித்ரா,19. இவர், அதே கல்லூரியில் பி.காம் 2ம் ஆண்டும், போரூர் பகுதியை சேர்ந்த காயத்ரி,20 அதே கல்லூரியில் பி.காம் 3ம் ஆண்டும் படித்து வந்தனர். இவர்களுடன் கல்லூரியில் படிக்கும் மாணவிகளான திருநின்றவூரைச் சேர்ந்த ஜெயஸ்ரீ,19, போரூரைச் சேர்ந்த மீனா,19 ஆகியோர் நேற்று மதியம் கிண்டி ரயில் நிலையத்தில் இறங்கி அங்கிருந்து கிண்டி ஹால்டா அருகே உள்ள கல்லூரிக்கு சாலையோரம் உள்ள நடைபாதை வழியாக நடந்து சென்று கொண்டிருந்தனர்.
தண்ணீர் லாரியால் விபத்து
அப்போது கிண்டியில் இருந்து சின்னமலை நோக்கி சென்ற குடிநீர் வாரிய ஒப்பந்த தண்ணீர் லாரி ஒன்று அந்த வழியாக வேகமாக சென்றது.
மேம்பாலத்தில் இருந்து இறங்கியபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்ததால் பிரேக் பிடிக்க முடியாமல் தாறுமாறாக ஓடிய அந்த லாரி, நடைபாதையில் நடந்து சென்று கொண்டிருந்த கல்லூரி மாணவிகள் மீது மோதியது. 3 மாணவிகள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர்.
லாரி டிரைவர் கைது
பிரேக் பிடிக்காத அந்த லாரி, அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் சென்ற ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த ஓமணக்குட்டன்,38 என்பவர் மீதும் திருமங்கலத்தைச் சேர்ந்த சுப்பிரமணி,53 என்பவரின் ஆட்டோ மீதும் மோதியது. நடந்து சென்ற மேலும் ஒருவர் மீது மோதியது. விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவர், ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு சென்று லாரியில் இருந்து குதித்து தப்பி ஓடினார். இந்த விபத்து குறித்து கிண்டி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் விபத்து ஏற்படுத்தி விட்டு தப்பி ஓடிய தண்ணீர் லாரி டிரைவரான விருதுநகரைச் சேர்ந்த ராஜேந்திரன்,45 என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் விபத்து குறித்து விசாரணை நடத்தினர்.
ஆசிரியர்கள் போராட்டம்
விபத்தில் படுகாயமடைந்த ஜெயஸ்ரீ மற்றும் சிவராஜுக்கு ராயப்பேட்டை மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. செல்லம்மாள் கல்லூரி ஆசிரியைகளும், பெற்றோர்களும் சாலை மறியல் போராட்டத்தை தொடர்ந்து கல்லூரிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. சிதைந்த மாணவிகளின் உடலை அடையாளம் காட்டச் சென்றவர்கள் மருத்துவமனையில் மயங்கி விழுந்தனர்.
உறவினர்களிடம் ஒப்படைப்பு
மூன்று மாணவிகளின் சடலங்கள் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் இன்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. பலியான மாணவிகள் மூவருமே ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். வங்கிப்பணி, அரசு வேலைக்கு செல்லவேண்டும் என்ற கனவுடனேயே பி காம் சேர்ந்து படித்துள்ளனர். எமனாக வந்த லாரி அவர்களின் உயிரை பறித்து விட்டது.
ரூ. 2 லட்சம் நிவாரண உதவி
உயிரிழந்த மாணவிகளின் குடும்பத்தினருக்கு தலா. 2 லட்சம் ரூபாய் நிவாரண உதவி வழங்கப்படும் என்று செல்லம்மாள் கல்லூரி நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டது. அதன்படி 3 மாணவிகளின் குடும்பத்தினரிடமும் தலா. 2 லட்சம் ரூபாயை கல்லூரி நிர்வாகத்தினர் அளித்தனர். விபத்தில் உயிரிழந்த மாணவிகளின் குடும்பத்தினருக்கு தமிழக அரசு நிவாரண உதவி வழங்க வேண்டும் என்பதே மாணவிகள், பேராசிரியர்களின் கோரிக்கையாகும்.