வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட உறவினரை பார்த்துவிட்டு வந்த பெண்ணிடம் 5 பவுன் தாலி பறிப்பு
சென்னை: சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட உறவினரை பார்த்துவிட்டு இருசக்கர வாகனத்தில் கணவருடன் வீடு திரும்பிய பெண்ணிடம் இருந்து 5 பவுன் தாலி சங்கிலி பறிக்கப்பட்டுள்ளது.
சென்னையை அடுத்து உள்ள நங்கநல்லூரில் வசித்து வருபவர் சுதாகர். அவரின் மனைவி சசிகலா. சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள உறவினரை சந்திக்க சுதாகர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.
உறவினரை பார்த்து ஆறுதல் கூறிவிட்டு அவர் மனைவி, குழந்தைகளுடன் வீட்டிற்கு கிளம்பியுள்ளார். தாம்பரம் காந்தி சாலையில் இருந்து அவரின் வாகனத்தை கொள்ளையர்கள் பின்தொடர்ந்து வந்துள்ளனர். அப்போது அவர்கள் சசிகலாவின் கழுத்தில் கிடந்த 5 பவுன் தங்க தாலி சங்கிலியை பறித்துள்ளனர்.
இதை பார்த்த சுதாகர் கொள்ளையர்களை இருசக்கர வாகனத்தில் துரத்தினார். அப்போது நிலைதடுமாறி அவரின் வாகனம் பள்ளத்தில் விழுந்ததில் சுதாகர், சசிகலா, குழந்தைகள் காயம் அடைந்தனர்.
இதையடுத்து சுதாகர் சங்கிலி பறிப்பு குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவரது புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் கொள்ளையர்களை தேடி வருகிறார்கள். வெள்ளத்தால் நொந்து போயுள்ள மக்களை இந்த கொள்ளை சம்பவம் மேலும் நோகடித்துள்ளது.