ரூ. 500 நோட்டு செல்லாது.. வெறிச்சோடிய காய்கறி கடைகள்
500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்ததன் எதிரொலியாக காய்கறி கடைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.
சென்னை: 500 மற்றும் 1000 ரூபாய் தாள்கள் செல்லாது என்ற மத்திய அரசின் திடீர் அறிவிப்பால் மக்களிடம் பணம் இல்லாமல் போனது. வங்கிகளில் இருந்தும் பணம் எடுக்க முடியாத சூழ்நிலை உருவானது. இதனால் அன்றாட தேவைகளுக்காக வாங்கப்படும் காய்கறிக் கடைகள் வெறிசோடி காணப்பட்டன.
நள்ளிரவு முதல் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மத்தியில் ஆளும் மோடி அரசு திடீரென அறிவித்தது. இதனால் இந்திய மக்கள் பெரும் அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளனர். 100 ரூபாய் 50 ரூபாய் நோட்டுக்களை வைத்தே செலவு செய்ய வேண்டி இருப்பதால், கையில் இருக்கும் பணத்தை வைத்து பார்த்து பார்த்து செலவு செய்து வருகின்றனர். இதனால், மளிகைக் கடைகள், காய்கறிக் கடைகள், பழம், பூக்கடைகள் என அன்றாடத் தேவைகளுக்கான கடைகள் வெறிச்சோடியே காணப்படுகின்றன.
மொத்தமாகவும், சில்லறையாகவும் விற்பனை நடைபெறும் கோயம்பேட்டில் இன்று அதிகாலையில் இருந்தே வியாபாரிகள் பெரும் சிக்கலுக்கு ஆளானார். மொத்தமாக காய்கறி, பழங்கள் வாங்கச் சென்ற சில்லறை வியாபாரிகளிடம் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை வாங்க மொத்த வியாபாரிகளால் மறுக்கவும் முடியாமல் தவித்தனர். அழுகும் பொருட்களை விற்கவில்லை என்றால் நாளை அது குப்பைத் தொட்டிக்குத்தான் போகும் என்பதால் பல மொத்த வியாபாரிகள் கடனுக்கு காய்கறி விற்றுள்ளனர். வாடிக்கையாக வாங்குபவர்களுக்குத்தான் கடனுக்கு கொடுக்க முடியும் என்பதால் மொத்த வியாபாரத்தில் பெரும் சிக்கல் ஏற்பட்டு காய்கறிகள் தேங்கி அழுகும் நிலை உருவாகியுள்ளது.
இதே போன்று காய்கறி சில்லறை வியாபாரிகளும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். கடைகளுக்குச் சென்று பணம் கொடுத்து காய்கறிகளை வாங்க மக்களிடம் பணம் இல்லை. விற்பதற்காக வாங்கப்பட்ட காய்கறிகள் அப்படியே இருப்பதாகக் கூறுகிறார் தியாகராயர் நகரில் காய்கறி விற்கும் வியாபாரி பாண்டியன். மேலும், காய்கறிகளை அடுத்த நாளைக்கு வைத்து விற்க முடியாது என்றும் கவலை தெரிவித்தார்.
இதே போன்று, பழங்கள், பூக்கள் விற்கும் கடைகளிலும் மக்கள் கூட்டம் குறைவாகவே இருந்தன. இன்னும் இரண்டு நாட்களில் எல்லாம் சரியாகிவிடும் என்ற நம்பிக்கையில் மக்களும், வியாபாரிகளும் இருந்து வருகின்றனர்.