ஆர்எஸ்எஸ் முகாம்... மாணவி உயிரிழந்த கள்ளக்குறிச்சி சக்தி பள்ளியின் மற்றொரு முகம்
கள்ளக்குறிச்சி: மாணவி உயிரிழந்த சக்தி இண்டெர்நேஷனல் பள்ளி நிர்வாகி பாஜகவில் பொறுப்பில் இருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல் வெளியான நிலையில், அந்த பள்ளியில் ஆர்.எஸ்.எஸ். பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு இருப்பது உறுதியாகியுள்ளது.
Recommended Video
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள கனியாமூர் கிராமத்தில் சக்தி இண்டெர்நேஷனல் மெட்ரிக் பள்ளி இயங்கி வருகிறது. இது ஈசிஆர் இண்டெர்நேஷனல் பள்ளி என்றும் அழைக்கப்படுகிறது.
இந்த தனியார் பள்ளியில் கடலூர் மாவட்டம் பெரிய நெசலூர் கிராமத்தை சேர்ந்த 17 வயது மாணவி 12 ஆம் வகுப்பு படித்து வந்தார்.

மாணவி மர்ம மரணம்
பள்ளி விடுதியில் தங்கி படித்து வந்த இந்த மாணவி கடந்த 13 ஆம் தேதி இரவு மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. மாணவி மரணம் தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் இருப்பதாக பெற்றோரும் உறவினர்களும் தெரிவித்து வந்தனர். இதற்கு நியாயம் கேட்டு மாணவியின் உறவினர்கள், பொதுமக்கள் தொடர்ந்து போராட்டங்களை நடத்தினர்.

வன்முறை
இந்த நிலையில் 4 வது நாளான நேற்று சாலை மறியல் போன்ற போராட்டங்களில் ஈடுபட்ட பொதுமக்கள் நேற்று பள்ளியை முற்றுகையிட்டனர். பெரும் போராட்டமாக இது உருவெடுத்த நிலையில் ஒரு கும்பல் பள்ளியின் 10க்கும் மேற்பட்ட வாகனங்களுக்கும், பள்ளி கட்டிடத்துக்கும் தீ வைத்தது. மேலும் சிலர் பள்ளியிலிருந்து மேசை, நாற்காலிகள், குளிர்சாதன பெட்டிகளை திருடிச் சென்றனர்.

144 தடை
போராட்டம் வன்முறையாக உருவெடுத்ததை தொடர்ந்து போலீசார் அவர்களை கட்டுப்படுத்த முயன்றனர். அவர்கள் மீது போராட்டக்கார்கள் கற்களை வீசி தாக்கியதில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் படுகாயமடைந்தனர். இதனை தொடர்ந்து கள்ளக்குறிச்சி தாலுகா, சின்ன சேலம், நயினாய் பாளையம் பகுதிகளுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

பலர் கைது
இந்த வன்முறை தொடர்பாக 350 க்கும் மேற்பட்டவர்களை காவல்துறை கைது செய்துள்ளது. இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு உள்ளது. இந்த வன்முறைக்கும் தங்களுக்கும் தொடர்பு இல்லை என்று உயிரிழந்த மாணவியின் தாயார் தெரிவித்துள்ள நிலையில், ஒரு கும்பல் திட்டமிட்டு உள்ளே புகுந்து பள்ளியில் தாக்குதல் நடத்தியதாக பலர் குற்றம்சாட்டி வருகின்றனர். வாட்ஸ் அப் குழுமம் ஒன்றை தொடங்கி போராட்டத்துக்கு ஆட்களை திரட்டியதும் உறுதி செய்யப்பட்டு உள்ளது.

ஹெச்.ராஜாவுடன் தொடர்பு
பள்ளியின் தாளாளர் சக்தி ரவிக்குமார், முதல்வர் சிவசங்கரன், பள்ளியின் செயலாளர் சாந்தி ரவிக்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் பள்ளியின் தாளாளர் சக்தி ரவிக்குமார் பாஜகவின் தமிழ் வளர்ச்சிக்குழுவின் முன்னாள் மாநில அமைப்பாளராக இருந்துள்ளதாவும், ஹெச்.ராஜா நடத்தி வரும் இந்து ஆலயங்கள் மீட்பு இயக்கத்தில் அவர் பங்கேற்றுள்ளதாகவும், ஹெச்.ராஜாவுடன் மேடையில் அவர் நிற்கும் புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.

ஆர்.எஸ்.எஸ். முகாம்
அதேபோல், இந்த சக்தி இண்டெர்நேஷனல் பள்ளியில் கடந்த 2019 ஆம் ஆண்டு ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பண்பு பயிற்சி முகாம் நடைபெற்று உள்ளது அப்போதே ஊடகங்களிலும் செய்தியாகி இருக்கிறது. கடலூர், புதுச்சேரி, விழுப்புரத்திலிருந்து 120 பேர் கலந்துகொண்ட இந்த முகாமில் தேச பக்தி, ராணுவ நடைபயிற்சி, சிலம்பம், கராத்தே போன்ற பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன. இதற்கு முன்பாகவும் அங்கு பலமுறை ஆர்.எஸ்.எஸ். சார்ந்த நிகழ்வுகள் நடத்தப்பட்டதாக குற்றம்சாட்டப்படுகிறது.












Click it and Unblock the Notifications