ஆர்எஸ்எஸ் அகில பாரத தலைவர் மோகன் பகவத் குமரி வருகை எதிரொலி - பலத்த பாதுகாப்பு
நாகர்கோவில்: ஆர்எஸ்எஸ் அகில பாரத தலைவர் மோகன் பகவத் நாளை மறுநாள் நாகர்கோவில் வருகிறார். இதனால் நாகர்கோவிலில் பாதுகாப்பினை போலீசார் பலப்படுத்தியுள்ளனர். குமரி மாவட்ட எல்லைகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
ஆர்.எஸ்.எஸ். அகில பாரத தலைவர் மோகன் பகவத் வருகிற 3 ஆம் தேதி மாலை கன்னியாகுமரி வருகிறார். அன்று டெல்லியில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு திருவனந்தபுரம் வரும் அவர் கார் மூலம் கன்னியாகுமரி வருகிறார். இரவு விவேகானந்தா கேந்திராவில் ஓய்வெடுக்கிறார்.
4 ஆம் தேதி காலை விவேகானந்தா கேந்திர நிர்வாகிகளுடன் கேந்திர வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசனை நடத்துகிறார். 5 ஆம் தேதி காலையில் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் நிர்மால்ய தரிசனத்தில் பல்வேறு தரிசனம் செய்கிறார். 6 ஆம் தேதி காலை கன்னியாகுமரியில் இருந்து கார் மூலம் திருவனந்தபுரம் செல்கிறார். அங்கிருந்து விமானம் மூலம் டெல்லி செல்கிறார்.
மோகன் பகவத் வருகையையொட்டி கன்னியாகுமரியில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பாதுகாப்பு ஏற்பாடுகளை குமரி மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தங்கசாமி இன்று காலை பார்வையிட்டு ஆய்வு செய்கிறார். மோகன் பகவத் விவேகானந்தா கேந்திராவில் தங்கும் இடம் மற்றும் செல்லும் பாதைகளை ஆய்வு செய்கிறார்.
உளவுத்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார், தனிப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுதேசன், கன்னியாகுமரி இன்ஸ்பெக்டர் முத்துராஜ், கடலோர பாதுகாப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் சகாய ஜோஸ் ஆகியோரும் ஆய்வு பணியில் ஈடுபட்டனர். மேலும் நாகர்கோவில் எல்லைகள் முழுவதும் வாகன தணிக்கை நடந்து வருகிறது.