37 நாடாளுமன்ற தொகுதியில் வெற்றின்னா... 217 சட்டசபை தொகுதி அதிமுகவுக்குத்தான்!
சென்னை: நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக 37 தொகுதிகளில் வென்றிருப்பதை வைத்து கூட்டிக் கழித்து பார்த்தால், 217 சட்டசபை தொகுதிகளை அந்த கட்சி கைப்பற்றியுள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள்.
நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்திலுள்ள 39 தொகுதிகளிலும் அதிமுக தனித்துப் போட்டியிட்டது. அதில் பாஜக கூட்டணி இரு தொகுதிகளில் வெற்றி பெற, 37 தொகுதிகளிலும் லட்டு போன்ற வெற்றியை அதிமுக பெற்றது. வெற்றிக்கான வாக்கு வித்தியாசமும், அதிகமாக இருந்தது. அதிமுக வாங்கிய மொத்த வாக்கு 44.30 சதவீதம். இதுவரை தமிழகத்தில் எந்த கட்சியும் இந்த அளவுக்கு வாக்கு பெற்றது இல்லை. திமுகவின் கோட்டையான சென்னையின் மூன்று தொகுதிகளையும் முதன்முறையாக அதிமுக கைப்பற்றிவிட்டது.
இதன் மூலம் தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளில், 217 சட்ட சபை தொகுதிகளை அதிமுக வென்றுவிட்டது என்றே எடுத்துக்கொள்ள வேண்டியுள்ளது. ஏனெனில் ஒரு நாடாளுமன்ற தொகுதியில் சராசரியாக 6 சட்டசபை தொகுதிகள் அடங்கியுள்ளன. சட்டசபை வாக்குவாரியாக பார்த்தாலும் இது சரியாக பொருந்திப்போகிறது. ஏனெனில் 17 சட்டசபை தொகுதிகளில்தான் அதிமுகவைவிட பிற கட்சிகள் அதிக வாக்குகள் வாங்கியுள்ளன.
நாகர்கோவில், பத்மநாபபுரம், குளச்சல், கன்னியாகுமரி, விளவங்கோடு, சிங்காநல்லூர், கோவை தெற்கு ஆகிய 7 தொகுதிகளில் பாஜகவும், பாளையங்கோட்டை, திருவாரூர், திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர், கூடலூர் ஆகிய நான்கு தொகுதிகளிலில் திமுகவும், பாப்பிரெட்டிபாளையம், தருமபுரி, பென்னாகரம், பாலக்கோடு ஆகிய 4 தொகுதிகளில் பாமகவும் அதிமுகவைவிட அதிக வாக்குகளை பெற்றுள்ளன. கிள்ளியூர் தொகுதியில் காங்கிரசின் வசந்தகுமாரும், காட்டுமன்னார் கோயில் தொகுதியில் திருமாவளவனும் அதிமுக வேட்பாளர்களைவிட அதிகம் வாக்குகள் பெற்றுள்ளனர். இதே நிலை நீடித்தால் அடுத்த சட்டசபை தேர்தலில் அதிமுக 217 சீட்டுகளை வெல்வது உறுதி.