தமிழக பாஜகவில் திறமையானவர்களை கண்டுகொள்வதில்லை.. எரிச்சலில் எஸ்.வி.சேகர்
சென்னை: தமிழக பாஜகவில் திறமையானவர்களை பயன்படுத்திக்கொள்வதில்லை என்று, தமிழக பாஜக பிரச்சார குழு செயலாளர் எஸ்.வி.சேகர் தெரிவித்துள்ளார்.
பாஜகவின் தேசிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அமித் ஷாவுக்கு வாழ்த்து தெரிவிக்க, டெல்லி சென்ற எஸ்.வி.சேகர் அவருடன் ஆலோசனை நடத்திவிட்டு திரும்பியுள்ளார்.
அமித் ஷா தமிழகம் வருகை
இதுகுறித்து அவர் கூறுகையில் "அமித் ஷாவுடன் மரியாதை நிமித்தமாக சந்தித்தேன். தமிழகத்தின் அரசியல் நிலவரம் குறித்து அப்போது ஆலோசிக்கப்பட்டது. இம்மாத இறுதிக்குள் தமிழகத்துக்கு அமித்ஷா, வர வாய்ப்புள்ளதாக அவருக்கு நெருக்கமானவர்கள் மூலம் அறிந்துகொண்டேன். இங்கு வந்து தமிழக அரசியல் நிலைமைகள் குறித்து அமித்ஷா ஆய்வு செய்வார்.
தலைவராக்குறேன்னு சொன்னாங்களே..
நான் பாஜகவில் லோக்சபா தேர்தலுக்கு முன்பாக இணைந்தேன். தமிழக பிரச்சார குழு தலைவராக பதவி அளிக்கப்படும் என்று எனக்கு அப்போது வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆனால் வெகுநாட்களாக அதுபோன்ற எந்த பதவியும் அளிக்கப்படவில்லை. தமிழக பாஜக தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், என்னை பிரச்சார குழு தலைவராக நியமிக்கும் கடிதத்தை மட்டும் அளித்தார்.
வேண்டியவர்களுக்கு பதவி
ஆயினும், பாஜகவின் எந்த ஒரு கூட்டத்துக்கும் எனக்கு தகவல் வருவதில்லை. மோடி பிரச்சாரத்துக்கு வந்தபோதுகூட எனக்கு தகவல் அளிக்கப்படவில்லை. தங்களுக்கு வேண்டியவர்களுக்கு பதவி கொடுக்க வேண்டும் என்றுதான் தமிழகத்து பாஜக தலைவர்கள் யோசிக்கிறார்கள்.
திறமைக்கு வாய்ப்பு தாங்க..
யார் கட்சியை தேசிய அளவுக்கு வளர்த்தெடுப்பார், யார் தேசிய பிரச்சினை மட்டுமின்றி, மாநில பிரச்சினைகளையும் சரியாக கையாளுவார் என்று யோசித்து அவர்களுக்கு பதவி வழங்கப்படுவதில்லை. திறமையானவர்களுக்கு வாய்ப்பு கொடுத்தால்தான் வட இந்திய கட்சி என்ற மாயையை மாற்றி பாஜகவை தென்னிந்தியாவிலும் வளர்க்க முடியும். இவ்வாறு எஸ்.வி.சேகர் தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் அரசியல் பிரவேசம்
எஸ்.வி.சேகர் இதுவரை பல கட்சிகளை பார்த்தவர். அதிமுகவில் அரசியல் பிரவேசம் செய்த சேகர், 2006ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் மைலாப்பூர் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். 2009ல், கட்சி விரோத நடவடிக்கை குற்றச்சாட்டுக்கு உள்ளாக்கப்பட்டு, அதிமுகவிலிருந்து சேகர் நீக்கப்பட்டார்.
கட்சி மாறுவது கடலைமிட்டாய் சாப்பிடுவது மாதிரி
இதைத்தொடர்ந்து 2010ல் ராகுல்காந்தியை சந்தித்துவிட்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்து கொண்டார். திமுக தலைவர் கருணாநிதி, பொருளாளர் ஸ்டாலின் ஆகியோரை புகழ்ந்து திடீரென திமுகவுக்கு செல்லும் தோற்றத்தை சேகர் ஏற்படுத்தியிருந்தார். இதன்பிறகு லோக்சபா தேர்தலுக்கு முன்பாக பாஜகவில் ஐக்கியமாகினார் என்பது குறிப்பிடத்தக்கது.