6வது கட்ட விசாரணையில் சகாயம்... தினபூமி மணிமாறனிடம் விசாரணை!
மதுரை: கிரானைட் முறைகேடுகள் தொடர்பாக விசாரணையில் ஈடுபட்டிருக்கும் ஐஏஎஸ் அதிகாரி சகாயம், தனது 6வது கட்ட விசாரணையை இன்று தொடங்கினார். இன்று தினபூமி நிறுவன ஆசிரியர் மணிமாறனிடமும், அவரது மகனிடமும் அவர் விசாரணை நடத்தினார்.
மதுரை மாவட்டத்தில் கிரானைட் குவாரிகள் நடத்திய முறைகேடுகள் தொடர்பாக விசாரணை நடத்த சகாயத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து அவர் மதுரையில் தங்கி தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்.

இதுவரை 5 கட்ட விசாரணையை சகாயம் நடத்தியுள்ளார். இதில் காணாமல் போன கிணறுகள், குளங்கள், கண்மாய்கள், மலை என அவர் அதிரடியாக ஆய்வு செய்துள்ளார். மலைகளில் ஏறியும், கண்மாய்களை ஆக்கிரமித்து அடுக்கி வைக்கப்பட்டுள்ள கிரானைட் குவியல்கள் மீதும் பயப்படாமல் ஏறி விசாரணை நடத்தியுள்ளார்.
இந்த நிலையில் இன்று தனது 6வது கட்ட விசாரணையை சகாயம் தொடங்கினார். இன்றைய விசாரணையில் தினபூமி நாளிதழ் ஆசிரியர் மணிமாறன், அவரது மகன் ரமேஷ் குமார், பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர், நிலச் சீர்திருத்தத் துறை உதவி ஆணையர் என பலர் கலந்து கொண்டனர்.
மூடிய அறைக்குள் வைத்து இவர்களிடம் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றார் சகாயம். தினபூமி நாளிதழ்தான் கிரானைட் முறைகேடு குறித்து முதல் முதலில் செய்தி வெளியிட்டது. மணிமாறனிடம், இந்த செய்திக்கான ஆதாரம் உள்ளிட்டவற்றை கேட்டுப் பெற்றார் சகாயம்.












Click it and Unblock the Notifications