புள்ளி விவரங்களை அள்ளித் தெளித்து அதிமுகதான் வெல்லும் என்று அடித்துப் பேசும் சைதை துரைசாமி!
சென்னை: லயோலா கல்லூரியின் பேராசிரியர் ராஜநாயகம் நடத்தியுள்ள கருத்துக் கணிப்பு ஒரு கட்டுக்கதை என்று சென்னை மேயர் சைதை துரைசாமி கூறியுள்ளார். இதைத் தகர்த்து வருகிற சட்டசபைத் தேர்தலில் திமுகவின் கணக்கை அதிமுக தீர்க்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
சென்னை மாநகராட்சி மன்றக் கூட்டத்தின்போது இப்படிப் பேசி முழங்கினார் சைதை துரைசாமி.
முன்னதாக சமீபத்தில் அதிமுக தலைமைக் கழக அலுவலகத்தில் நடந்த சென்னை மாநகராட்சி கவுன்சிலர்கள் கூட்டத்திற்கு சைதை துரைசாமியை அழைக்கக் கூட இல்லை கட்சி மேலிடம் என்பது நினைவிருக்கலாம்.
மாநகராட்சிக் கூட்டத்தில் சைதை துரைசாமி பேசியதாவது:
பழம் பெருமையும்.. புதுமைச் சிறப்பும்
ஈடில்லாப் பழம் பெருமையும் புதுமைச் சிறப்பும் கொண்ட நமது தமிழ் நாடு இன்று ஒரு முக்கியமான கால கட்டத்தில் நின்று கொண்டிருக்கிறது.
கனி கொய்திட
மாற்றம் தந்த மக்களுக்கு ஏற்றம் தந்திட முதல்வர் ஜெயலலிதா நிறைவேற்றிய முன்னோடி திட்டங்களின் பயனால், முற்போக்குத் திட்டங்களின் வெற்றியால், சீரிய நிர்வாக திறத்தால், சிறப்பு மிக்க நேர்மைத் தரத்தால், 234 தொகுதிகளிலும் வெற்றிக் கனி கொய்திட 2016 சட்டமன்ற தேர்தலை அ.தி.மு.க.வும் அதன் தொண்டர்களும் மிகுந்த ஆர்வத்தோடும், உற்சாகத்தோடும் எதிர் நோக்கிக் காத்திருக்கிறார்கள்.
மாய்மாலம்
இதற்கு நடுவே, தங்களுக்குத் தோல்வி நிச்சயம், திமுகவுக்கும் தனக்கும் இதுவே கடைசி தேர்தல் என்று உணர்ந்து கொண்ட காரணத்தால், கருணாநிதி, என்னவெல்லாம் மாய்மாலம் செய்ய முடியுமோ, எப்படியெல்லாம் ஜெகஜ்ஜாலம் செய்ய முடியுமோ அவ்வளவையும் செய்தேனும் ஆட்சி அதிகாரம் பெற்றிட அலை மோதிக் கொண்டிருக்கிறார்.
2011 தேர்தலில்
கடந்த 2011 சட்டசபைத் தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற்றது. திமுக எதிர்க்கட்சி அந்தஸ்தைக்கூட பெறமுடியாமல் அவலப்பட்டு நின்றது.
அப்போ நாங்க வாங்கிய வாக்குகள்
2011 சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் 10 கட்சி கூட்டணி பெற்ற வாக்குகள் 1 கோடியே 80 லட்சத்து 81 ஆயிரத்து 551. திமுக 8 கட்சி கூட்டணி பெற்ற வாக்குகள் 1 கோடியே 45 லட்சத்து 13 ஆயிரத்து 816. இந்த தேர்தலில் தபால் ஓட்டுக்கள் வாயிலாக அரசு ஊழியர்கள் அளித்த வாக்குகள் திமுகவுக்கு 81 ஆயிரத்து 415.
2014ல் வாங்கிய வாக்குகள்
2014ல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக தனித்து நின்று பெற்ற வாக்குகள் 1 கோடியே 79 லட்சத்து 83 ஆயிரத்து 168 - சதவீதம் 44.34
திமுகவுக்குக் கிடைத்த வாக்குகள்
திமுக 5 கட்சி கூட்டணி (வி.சி.க, முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, புதிய தமிழகம்) பெற்ற வாக்குகள் 1 கோடியே 8 லட்சத்து 84 ஆயிரத்து 347 - சதவீதம் 26.8. இந்த தேர்தலில் அரசு ஊழியர்கள் தி.மு.க.வுக்கு அளித்த வாக்குகளின் எண்ணிக்கை 27 ஆயிரத்து 200 மட்டுமே ஆகும்.
ஆக..!
ஆக ஜெயலலிதா தலைமையிலான அதிமுக 2011ல் 9 கட்சிகளுடன் கூட்டணி வைத்து நின்ற போது பெற்ற வாக்குகள் 1 கோடியே 80 லட்சத்து 81 ஆயிரத்து 551. 2014ல் தனித்து நின்று பெற்றது 1 கோடியே 79 லட்சத்து 83 ஆயிரத்து 168.
எப்பூடி!
கூட்டணி இல்லாமல் கழகம் பெற்ற வாக்குகளின் மூலம், ஜெயலலிதாவின் திட்டங்களால் பொதுமக்களின் மகத்தான ஆதரவைப் பெற்று வளர்ந்து வருகின்ற மாபெரும் மக்கள் இயக்கம் அ.தி.மு.க. என்பதை அறியலாம்.
உண்மை தெரியுதா சாமீ!
இந்த இரண்டு தேர்தல் முடிவுகளில் இருந்து ஒரு உண்மையைத் தெளிவாக தெரிந்து கொள்ளலாம். அரசு ஊழியர்களின் ஆதரவை பெற்றுள்ளோம் என்று மார் தட்டிக் கொள்ளும் திமுக, 2011ல் சட்டசபைத் தேர்தலில் பெற்ற வாக்குகளை விட, நாடாளுமன்ற தேர்தலில் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை 54 ஆயிரத்து 215 வாக்குகள் குறைவு ஆகும்.
போச்சு போச்சு!
இதன் மூலம் திமுக தனது செல்வாக்கை பொதுமக்கள், தாய்மார்கள், நடுநிலையாளர்கள் மத்தியில் மட்டுமின்றி அவர்கள் பெரிதும் நம்பி இருந்த அரசு ஊழியர்கள் மத்தியிலும் வெகுவாக இழந்து விட்டது என்பதையும், அரசு ஊழியர்களும் அவர்களது குடும்பங்களும் முழுக்க முழுக்க முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக இருக்கிறார்கள் என்பதையும் உணர முடியும்.
உண்மை இப்படி இருக்க
உண்மை நிலை இப்படி இருக்கும்போது, அண்மையில் லயோலா கல்லூரி மாணவர்கள் மேற்கொண்டதாகக் கூறி ஒரு கருத்துக் கணிப்பு பத்திரிகைகளில் வெளியிடப்பட்டது. தோல்வி பயத்தால், துவண்டுபோய் கிடக்கும் திமுகவினருக்கு உற்சாகம் கொடுக்கும் வகையில் இந்த கருத்துக் கணிப்பில் அதிமுகவுக்கும் திமுகவுக்கும் இடையே இரண்டு விழுக்காடு மட்டுமே வித்தியாசம் இருப்பது போல கட்டுக்கதை கருத்தை திணிக்க முற்பட்டிருக்கிறது அந்த கருத்துத் திணிப்பு.
வடி கட்டிய பொய்
கூட்டணி கட்சிகளின் வாக்குகள் இல்லாமல் திமுகவின் வாக்குகள் மட்டும் 20 சதவிகிதத்திற்கு குறைவாக பெற்றுள்ள அந்தக்கட்சி 44.3 சதவீதம் பெற்றுள்ள அதிமுகவுக்கு அடுத்த நிலையில் அல்லது 2 சதவீதம் வாக்கு வித்தியாசத்தில் உள்ளது என்று எப்படிச்சொல்ல முடியும். இதிலிருந்தே இந்த கருத்துக்கணிப்பு எத்தகைய வடிகட்டிய பொய் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
நாளுக்கு நாள் பெருகுகிறது
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலுக்குப் பிறகு ஜெயலலிதாவுக்கும், அதிமுகவுக்கும் நாளுக்கு நாள் மக்கள் செல்வாக்கு பெருகி வருகிறது. அ.தி.மு.க.வுக்கு ஆதரவு குறைய எந்த எதிர்ப்பு சூழலும் உறுதியாக இல்லை. அதே நேரத்தில் திமுகவுக்கு மக்கள் ஆதரவு அதிகரிக்க புதிதாக என்ன நல்ல சூழல் ஏற்பட்டு விட்டது? அக்கட்சியை மக்கள் வரவேற்கும் அளவிற்கு கட்சியில் என்ன மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளார்கள்?
டீட்டெய்ல் சொல்லுங்க பார்ப்போம்
திமுக 20 சதவிகித வாக்கிலிருந்து 35 சதவீதம் உயர்ந்து விட்டதாக கூறுபவர்களால் அதற்கு பொருத்தமான காரணத்தை புள்ளி விவரத்துடன் இதுவரை விளக்கம் சொல்ல முடியவில்லை.
மிகப்பெரிய மோசடி
தமிழ்நாட்டில் பதிவான மொத்த வாக்குகளில் 44.3 சதவீதம் பெற்ற அதிமுக கட்சியைப் பற்றி லயோலா கல்லூரியை சார்ந்த 50 பேர் 5,464 பேரிடம் கருத்துக் கேட்டு, அந்தக் கருத்தே ஒட்டு மொத்த தமிழக வாக்காளர்களின் கருத்து என்று நடத்துவது மிகப் பெரிய மோசடி அல்லவா.
காதில் பூ
மக்களிடம் நாள் தோறும் செல்வாக்கு பெற்று வரும் அதிமுகவை, மக்கள் நேசிக்கும் முதல்வர் ஜெயலலிதாவின் செல்வாக்கு குறைந்து விட்டது என்றும், நாளுக்கு நாள் செல்வாக்கு இழந்து வரும் திமுகவின் செல்வாக்கு கூடியுள்ளது என்ற கட்டுக்கதையை கருத்து கணிப்பு என்ற போர்வையில் காதில் பூ சுற்றும் வேலை நடைபெறுகிறது.
கணக்கைத் தீர்ப்போம்
1972ம் ஆண்டு, திமுகவின் கணக்கு கேட்டு பிறந்த கட்சி அதிமுக, 2016ம் ஆண்டு, தி.மு.க.வின் கணக்கை தீர்க்கும் கட்சி அதிமுக. தமிழக முதல்வர் ஜெயலலிதா, இதுவரை இல்லாத வகையில் கடந்த 5 ஆண்டுகளில் அளப்பரிய சாதனைகளை படைத்திருக்கிறார்கள். இமாலய சாதனைகளை குவித்திருக்கிறார்கள். அந்த சாதனைகளை களத்தில், மக்கள் மன்றத்தில் எடுத்துச் செல்வோம்.
வீடு வீடாப் போவோம்
வீதி, வீதியாக செல்வோம், வீடு, வீடாக செல்வோம், ஜெயலலிதாவின் மாபெரும் சாதனைகளை துண்டு பிரசுரங்களாக வழங்குவோம். தெருமுனைகளில் நின்று பேசுவோம், டீக்கடைகளில் நின்று பேசுவோம், மக்கள் கூடும் இடம் எல்லாம் கூடவே சென்று பேசுவோம். மக்களுக்காக நான் - மக்களால் நான் என வாழும் மக்கள் சக்தியின் மறு பிம்பமாக விளங்கும் ஜெயலலிதாவின் புகழை உலகறியச் செய்வோம். 2016 சட்டசபைத் தேர்தலில் தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் வெற்றிக் கனி பறித்து ஜெயலலிதாவின் பொற்கரங்களில் ஒப்படைப்போம் என்றார் சைதை துரைசாமி.