அடிக்கடி நிகழ்ந்த மரணங்கள்.. பூஜைகள், பரிகாரங்களில் சசிகலா குடும்பத்தார் மும்முரம்!
சென்னை: சசிகலா குடும்பத்தில் நிகழும் மர்ம மரணங்கள் காரணமாக தொடர்ச்சியான யாகங்கள், பரிகாரங்கள் என கோவில்களை வலம் வரத் தொடங்கியுள்ளனர்.
'பிரம்மஹத்தி தோஷம்தான் அவர்களை வாட்டி வதைக்கிறது' என்று சாமியார்கள் கூறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முதல்வராக இருந்த ஜெயலலிதா இறப்புக்குப் பிறகு, போயஸ் கார்டனுக்குள் சசிகலா சொந்த பந்தங்கள் உலா வந்தனர்.
வேண்டிய உணவுகளை சமைத்து சாப்பிட்டு, பழைய கதைகளைப் பேசிக் கொண்டு தங்கியிருந்தனர். ஜெயலலிதா பயன்படுத்திய அறையில் தங்கியிருந்து, அவரது பொருட்களையும் பயன்படுத்தத் தொடங்கினர்.
கார்டனுக்கு போவதில்லை
இந்நிலையில், சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா சிறைக்குச் சென்ற பிறகு, இளவரசியின் மகன் விவேக்கும் திவாகரனின் மகன் ஜெயானந்தும் போயஸ் கார்டனுக்கு அடிக்கடி சென்று வந்தனர். அங்கு இரவு நேரங்களில் விநோத சத்தம் கேட்பதாகவும் கார்டன் ஊழியர்கள் அச்சப்பட்டனர். கார்டனில் நீண்டகாலம் உதவியாளராக இருக்கும் ராஜம் என்ற மூதாட்டியைத் தவிர்த்து, மற்றவர்கள் உள்ளே செல்வதற்கே அச்சப்படுகின்றனர்.
நடராசனுக்கு பிரச்சினை
அதிலும், தொடர்ச்சியாக நடக்கும் சசிகலா குடும்பத்து மரணங்கள் கூடுதல் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளன. இதைப் பற்றி அ.தி.மு.கவின் முக்கிய பிரமுகர் ஒருவரிடம் பேசினோம். " சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறைக்குள் சசிகலா சென்ற நாட்களில், கல்லீரல் வீக்கத்தால் அப்போலோவில் அனுமதிக்கப்பட்டார் நடராசன். சசிகலா குடும்பத்தின் மீது மத்திய அரசின் நடவடிக்கைகள் தீவிரமாக இருந்தபோதும், மருத்துவமனையைவிட்டு அவர் வெளியே வரவில்லை. இதன்பின்னர், சசிகலாவால் பாசத்தைக் கொட்டி வளர்க்கப்பட்ட மகாதேவன், அகால மரணம் அடைந்ததை உறவினர்களால் நம்ப முடியவில்லை. அதுவும் இளவயதில் இதய நோய் கோளாறால் அவர் இறந்தது சசிகலாவுக்குக் கூடுதல் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சசிகலா அண்ணன் மனைவி
அடுத்த ஒரே மாதத்தில் சசிகலா அண்ணன் சுந்தர வதனத்தின் மனைவி சந்தான லட்சுமி இறந்தது உறவுகளை ரொம்பவே உலுக்கிவிட்டது. 'ஒவ்வொன்றாக சரிந்து விழுவது சரியானதல்ல' என குடும்ப ஜோதிடர்கள் விளக்கவே, ராகு-கேது பரிகார பூஜையில் இறங்கினார் திவாகரன்.
யாகங்கள்
கேரள நம்பூதிரிகள், வடஇந்திய ஜோதிடர்கள் என அனைத்து தரப்பினரிடமும் தீவிரமாக ஆலோசனை செய்கின்றனர். ஒவ்வொருவர் வீட்டிலும் ரகசிய யாகங்கள் தொடர்ந்து நடக்கிறது. குடும்ப உறவுகளும் ஒருவரையொருவர் எச்சரிக்கையோடு இருக்கும்படி எச்சரிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆட்சி அதிகாரத்தில் நடக்கும் சண்டைகள் ஒருபுறம் இருந்தாலும், இந்த திடீர் இழப்புகளாலும் சசிகலா குடும்பத்தினர் யாருக்கும் நிம்மதியான தூக்கம் இல்லை" என்றார் விரிவாக.