இந்திய வரைபடத்திலிருந்து அழிக்கப்படும் தொழுப்பேடு கிராமம்.. சேலம் 8 வழி சாலையின் விளைவு
சேலம் 8 வழிச்சாலை காரணமாக திருவண்ணாமலை அருகே தொழிபபேடு என்ற கிராமமே மொத்தமாக அழியும் நிலை ஏற்பட்டு உள்ளது.
Recommended Video
திருவண்ணாமலை: சேலம் 8 வழிச்சாலை காரணமாக திருவண்ணாமலை அருகே தொழிபபேடு என்ற கிராமமே மொத்தமாக அழியும் நிலை ஏற்பட்டு உள்ளது.
சேலம் - சென்னை இடையே புதிதாக போடப்பட உள்ள 8 வழி சாலைக்கு கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது என்று கூட கூறலாம். ஆனாலும் இதற்கு எதிராக மக்கள் போராடி வருகிறார்கள்.
தமிழக அரசு இவர்களை கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறது. பல போராட்டக்காரர்களை, போராட்டத்தை முன்னெடுக்கும் போராளிகளை போலீஸ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளது.
ஆனால் நாளுக்கு நாள் போராட்டம் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே செல்கிறது. இந்த நிலையில் இந்த சாலைக்கு எதிராக தற்போது சட்டப்போராட்டமும் தொடங்கியுள்ளது.
கிராமம்
திருவண்ணாமலை அருகே தொழிபபேடு என்ற கிராமமே மொத்தமாக அழியும் நிலையில் உள்ளது. இந்த கிராமம் போளூர் அருகே அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் மொத்தமே 120 வீடுகள்தான் இருக்கும். இந்த கிராமத்தில் இருக்கும் மக்கள் எல்லோருமே விவசாயத்தை மட்டுமே நம்பி வாழும் மக்கள். இவர்களின் விளைநிலம் மட்டுமில்லாமல் வீட்டு மனையும் பறிபோகிறது.
வீடுகள்
இந்த நிலையில் 90 சதவிகித வீடுகள் அழிக்கப்படும் நிலையில் உள்ளது. சுமார் 100க்கும் மேற்ப்பட்ட வீடுகள் இடிக்கப்பட உள்ளது. அதேபோல் அந்த இடத்தில் உள்ள விளைநிலம் மொத்தமாக அரசால் கையகப்படுத்தப்பட உள்ளது. அங்கு இருக்கும் பாரம்பரியமான இந்து கோவில் ஒன்று இடிக்கப்பட உள்ளது. கிராமத்தில் இருக்கும் பள்ளிக்கூடமும் இடிக்கப்பட இருக்கிறது.
பெரிய எதிர்ப்பு
இந்த சாலைக்கு அப்பகுதி மக்கள் பெரிய எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுவரை எந்த அரசியல் கட்சியும் தங்களை வந்து சந்திக்கவில்லை என்று அவர்கள் கூறியுள்ளனர். அதேபோல், என்ன சன்மானம் கொடுத்தாலும் இந்த இடத்தை விட்டு செல்ல மாட்டோம் என்று போராட்டம் செய்து வருகிறார்கள். கடந்த ஒரு மாதமாக அவர்கள் போராட்டம் செய்து வருகிறார்கள்.
போலீஸ் பாதுகாப்புடன்
இந்த பகுதியில் நிலத்தை அளவீடு செய்வதற்காக முதலில் அதிகாரிகள் வந்துள்ளனர். ஆனால் மக்கள் போராட்டத்தால் அவர்கள் நிலத்தை அளக்காமல் சென்றுள்ளனர். அதே சமயம் இனி வரும் நாட்களில் அதிகாரிகள் போலீஸ் பாதுகாப்புடன் வந்து நிலத்தை அளப்பார்கள் என்று கூறப்படுகிறது.