‘ரகசியத்தை’ சொல்லி விடுவதாக மிரட்டல் - இளைஞரிடம் ரூ. 21 லட்சம் பறித்த 4 பேர் கைது
சேலம்: பல்வேறு காரணங்களைக் கூறி இளைஞரிடம் ரூ. 21 லட்சம் பறித்த நான்கு பேரை சேலம் போலீசார் கைது செய்துள்ளனர்.
சேலம் பொன்னம்மாபேட்டையைச் சேர்ந்தவர் சக்திவேல் (34). மணமாகி ஒரு குழந்தைக்கு தந்தையான சக்திவேல், பிரபல தனியார் ஜூவல்லரி ஒன்றில் நகை மதிப்பீட்டாளராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பணியில் இருந்து நீக்கப்பட்ட சக்திவேல், தனது வீட்டின் அருகிலேயே தங்க நகைப்பட்டறை வைத்து மொத்தமாக நகை செய்துகொடுக்கும் வேலையை செய்து வந்தார்.
இதற்கிடையே, தன்னுடன் நகைக்கடையில் வேலைபார்த்த அய்யனார்கோரிகாடு பகுதியைச் சேர்ந்த கணேஷ்பாபுவையும் தனது தொழிலில் சேர்த்துக் கொண்டார் சக்திவேல். நாளடைவில், சக்திவேலின் பலவீனத்தை அறிந்து கொண்ட கணேஷ் அதனை தனக்கு சாதகமாக்கி பணம் பறிக்கத் திட்டமிட்டுள்ளார்.
அதன்படி, நகைக்கடையில் வேலை போனதற்கான ரகசியத்தைக் கூறி விடுவதாகக் கூறி சக்திவேலிடம் பணம் கேட்டுள்ளார் கணேஷ். இந்த மிரட்டலுக்குப் பயந்த சக்திவேலும் வெவ்வேறு சமயங்களில் கணேஷிற்கு ரூ. 3 லட்சம் வரைக் கொடுத்துள்ளார்.
இந்நிலையில், கணேஷின் இந்தத் திட்டத்தை அறிந்த அவரது நண்பர்களான நந்தகுமார் (26), பெரமனூரைச் சேர்ந்த கிரண் ( 22) அழகாபுரத்தைச் சேர்ந்த சண்முகம்(26) ஆகியோர், சக்திவேலிடம் தாங்களும் பணம் பறிக்கத் திட்டமிட்டனர்.
அதன்படி, முதல்கட்டமாக கணேஷிற்குத் தெரியாமல் சக்திவேலை மிரட்டி அவர்கள் ரூ.5 லட்சத்தைப் பெற்றுள்ளனர். அந்தப் பணம் மூலம் நந்தகுமார் அடமானத்தில் இருந்த தன்னுடைய வீட்டை மீட்டுள்ளார்.
பணருசி கண்ட நண்பர்கள், தொடர்ந்து சக்திவேலிடம் இருந்து பணம் பறிக்க முடிவு செய்தனர். பின்னர், குடும்பத்தினரை கொலை செய்து விடுவதாக மிரட்டி சக்திவேலிடம் ரூ. 14 லட்சம் கேட்டு மிரட்டியுள்ளனர்.
சக்திவேலும் தனது வீட்டை அடமானம் வைத்து, அந்த தொகையை அவர்களிடம் கொடுத்துள்ளார். இந்த தகவல் அறிந்த சக்திவேலின் மைத்துனர் சுமன் என்பவர் அம்மாபேட்டை போலீஸில் புகார் செய்துள்ளார்.
இது தொடர்பாக சம்பந்தப்பட்ட நான்கு பேரிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, அப்பாவியான சக்திவேலை மிரட்டி, 21 லட்சம் ரூபாய் வரை, பணம் பறித்ததை அவர்கள் ஒப்புக்கொண்டனர். அவர்களிடம் இருந்து, 10.73 லட்சம் ரூபாய் ரொக்கம், 3.5 சவரன் நகை, இரண்டு கார், ஒரு புல்லட் மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து, குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேரிடமும் விசாரணை மேற்கொண்ட சேலம் மாநகர போலீஸ்கமிஷனர் அமல்ராஜ், இந்த விவகாரத்தில் புகார் கிடைத்தவுடன் விரைந்து செயல்பட்ட காவல்துறை அதிகாரிகளை பாராட்டினார்.












Click it and Unblock the Notifications