சமயபுரம் கோயிலில் விபரீதம்.. மதம் பிடித்த யானை மிதித்து பாகன் பலி.. பக்தர்கள் ஓட்டம்.. கோவில் மூடல்
கோயில் யானை மிதித்து பாகன் உயிரிழந்தார்.
Recommended Video
திருச்சி: சமயபுரம் கோயிலில் மதம் பிடித்த யானை மிதித்து பாகன் கஜேந்திரன் உயிரிழந்தார். யானையின் ஆவேசத்தினால் பக்தர்கள் அலறியடித்து கொண்டு ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் இன்று வெள்ளிகிழமை என்பதால் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. பக்தர்கள் பூஜை செய்து கொண்டிருந்தபோது, அங்கிருந்த கோயில் யானை மசினிக்கு திடீரென்று மதம் பிடித்தது.
இதனால் அங்கும் இங்கும் மூர்க்கமாக நடக்க தொடங்கியது. இதனால் பக்தர்கள் அலறியடித்தவாறே அங்கும் இங்கும் சிதறி ஓட்டம் பிடிக்க தொடங்கினர். அப்போது ஒருவரையொருவர் முண்டியடித்துக் கொண்டு ஓடினர். மசினி யானை விரட்டியதில் 8 பேர் காயமடைந்ததாக கூறப்படுகிறது. மதம் பிடித்த யானை கோயிலுக்கு வந்திருந்த பக்தர்களின் குழந்தைகளையும் தூக்கி வீசியதாக தெரிகிறது. யானையை கட்டுப்படுத்த பாகன் கஜேந்திரன் கடுமையாக போராடினார். ஆனால் யானை மசினி கஜேந்திரனை மிதித்தது. இதில் கஜேந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனால் பாகனும் இறந்துவிட்டதால் யானையை அடக்க யாராலும் முடியவில்லை. மசினி யானை தொடர்ந்து பக்தர்களை விரட்டி தாக்கி வருகிறது. இதனால் அங்கு பதற்றம் நீடித்து வருகிறது. எனவே யானையை அடக்கும் பயிற்சி பெற்றவர்கள் சமயபுரம் விரைந்துள்ளனர். இதனிடையே பாகன் கஜேந்திரன் உயிரிழந்ததை அடுத்து சமயபுரம் கோயில் நடை உடனடியாக சாத்தப்பட்டது.
இந்த கோயிலுக்கு சற்று முன்னர்தான் அமைச்சர் துரைக்கண்ணு வந்து சென்றார். அவர் சென்ற சிறிது நேரத்திலேயே யானைக்கு மதம் பிடிக்க தொடங்கியதாக கூறப்படுகிறது.