குட்டையில் மூழ்கடித்து மகனையும், மகளையும் கொன்ற தாய்
சேலம்: சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே குட்டையில் தனது மகளையும், மகனையும் மூழ்கடித்துக் கொன்ற தாயை போலீஸார் கைது செய்துள்ளனர்.
சங்ககிரி அருகே உள்ள திருவாண்டிப்பட்டி மலையாகாடு பகுதியை சேர்ந்தவர் சக்திவேல். இவருடைய மனைவி மணிமேகலை (28). இந்தத் தம்பதிக்கு ஹர்னீஸ் என்ற 6 வயது மகனும், சுசீதா என்ற 3 வயது மகளும் இருந்தனர்.

2 ஆண்டுகளுக்கு முன்பு மணிமேகலைக்கு மனநிலை பாதிக்கப்பட்டது. இதனால் குழந்தைகளை சக்திவேலுவின் பெற்றோர் வளர்த்து வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மணிமேகலை தனது 2 குழந்தைகளையும் அதே பகுதியில் உள்ள ஒரு குட்டையில் மூழ்கடித்து கொலை செய்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் சங்ககிரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து 2 குழந்தைகளின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சங்ககிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் சக்திவேல் கூறுகையில், "கடந்த ஏழரை ஆண்டுகளுக்கு முன்பு எனக்கும், மணிமேகலைக்கும் திருமணம் நடந்தது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அவருக்கு மனநிலை பாதிக்கப்பட்டது. இதற்காக சேலத்தில் உள்ள ஒரு டாக்டரிடம் அவர் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த செப்டம்பர் மாதம் 25ம் தேதி மணிமேகலை எங்களது 2 குழந்தைகளையும் பிளேடால் கழுத்தை அறுத்து கொலை செய்ய முயன்றார். அவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்து காப்பாற்றினோம். இதனால் அவருடன் நான் பேசாமல் இருந்து வந்தேன். ஆனால், சம்பவத்தன்று எனது 2 குழந்தைகளையும் குட்டையில் மூழ்கடித்து கொன்று விட்டார்" என்று கூறினாராம்.
அதனைத் தொடர்ந்து போலீஸார் மணிமேகலையைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.












Click it and Unblock the Notifications