சட்டசபை தேர்தலில் சீமானுடன் கைகோர்க்க துடிக்கும் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி
சட்டசபை தேர்தலில் நாம் தமிழர் கட்சியுடன் கூட்டணி அமைப்பதில் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி முனைப்பு காட்டுகிறதாம்.
Recommended Video

சென்னை: நாம் தமிழர் கட்சியுடன் தேர்தல் கூட்டணி வைத்துக் கொள்வதில் மிகவும் முனைப்புடன் இருக்கிறது சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி. அதே நேரத்தில் ஏர்போர்ட்டில் நடந்த ஒரு சாதாரண சந்திப்புக்கு கூட்டணி என்பது போன்ற உள்நோக்கம் தேவை இல்லை என்கிறது நாம் தமிழர் தரப்பு.
'தமிழக நலனுக்காக இணைந்து செயல்படுவது' என சீமானும் சரத்குமாரும் அளித்த பேட்டி, அரசியல் அரங்கில் விவாதமாக மாறியது. ' நான் எப்படி கூட்டணின்னு சொன்னேன். அது ஒரு இயல்பான சந்திப்பு. வேறு எந்த உள்நோக்கமும் இல்லை' எனக் கொந்தளித்துப் பேசியிருக்கிறார் சீமான்.
மதுரை விமான நிலையத்தில் கடந்த 3-ந் தேதி பத்திரிகையாளர்களை சந்தித்தனர் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும் சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமாரும். அப்போது பேசிய சீமான், ' இனிமேல் தமிழகத்தின் நலன்கருதி பல்வேறு பிரச்சினைகளில் இருவரும் இணைந்து செயல்படுவோம்' என்றார். இந்த சந்திப்பு, ' வரக்கூடிய தேர்தல்களுக்கான கூட்டணியாக அமையும். திராவிடக் கட்சிகளுக்கு மாற்றான சிந்தனை ஓட்டத்தில் சீமான் இருக்கிறார். அதே மனநிலையில்தான் சரத்தும் இருக்கிறார். இது நிச்சயம் கூட்டணியாக மாறும் என்ற பேச்சு இரண்டு கட்சித் தொண்டர்கள் மத்தியில் பேசப்பட்டது.

யதேச்சையான சந்திப்பு
இந்தத் தகவல் சீமானின் கவனத்துக்கும் கொண்டு செல்லப்பட்டது. இதற்குப் பதில் கொடுத்த சீமான், ' இந்த சந்திப்பு திட்டமிட்டு நடந்தது அல்ல. ஒரு துக்க நிகழ்வுக்குச் சென்றுவிட்டு, மதுரை விமான நிலையம் வந்தேன்.

கூட்டாக பேட்டி
அப்போது சரத்தும் அதே விமான நிலையத்துக்கு வந்திருந்தார். எங்களைப் பார்த்ததும் பத்திரிகையாளர்கள் கூடிவிட்டனர். ' நீங்க போய் முதல்ல பேட்டி கொடுங்கண்ணே...' என அவரிடம் சொன்னேன். அவரோ, ' வாங்க..நாம் ரெண்டு பேரும் சேர்ந்தே மீடியாக்களை சந்திப்போம்' என அவர் சொன்னார்.

கூட்டணி கிடையாது
மிக இயல்பாக நடந்த இந்த சம்பவத்தை, கூட்டணி எனத் திரிக்கின்றனர். அப்படி எந்த கூட்டணியும் இல்லை. பொதுப் பிரச்னைகளில் ஒன்று சேர்ந்து போராடுவோம் என்பது எப்படி கூட்டணியாகும். அவர் ஒரு கட்சியை நடத்தி வருகிறார். நான் ஒரு கட்சியை நடத்தி வருகிறேன். அவ்வளவுதான்.

உள் விவகாரங்கள் இல்லை
வெகு இயல்பாகத்தான் இருவரும் பேசிக் கொண்டோம். இதில் எந்தவித உள்விவகாரங்களும் இல்லை' எனப் பேசியிருக்கிறார். அதே சமயம் இந்த விவகாரம் குறித்துப் பேசும் சமத்துவ மக்கள் கட்சி நிர்வாகிகளோ, " தற்போதுள்ள சூழலில் அரசியல் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. ஆர்.கே.நகர் தேர்தலில் தன்னுடைய பிரசார அணுகுமுறையால், பிரதான கட்சிகளுக்கு இணையான வாக்குகளைப் பெற்றார் சீமான். அவருடைய பிரசாரத்தால், பிரதான கட்சி வேட்பாளர்களே அதிர்ந்தனர்.

தெறிக்கவிட்ட ஆர்கே நகர்
அந்தளவுக்கு இளைஞர் பட்டாளத்தை முன்வைத்து வலம் வந்தார். இவ்வளவு பணபலத்துக்கு மத்தியில் அவர் பெற்ற வாக்குகள் சாதாரணமானது அல்ல. வரக்கூடிய தேர்தல்களில் நாம் தமிழர் கட்சி மீதான எதிர்பார்ப்பு அதிகமாகும். அந்தளவுக்கு அனைத்து அரசியல் தலைவர்களையும் அவர் கடுமையாக விமர்சிக்கிறார்.

மண்ணின் மைந்தர்கள்
கூட்டணிக்காக யாரிடமும் போய் அவர் நின்றதில்லை. அந்த அளவுக்கு அவர் மீது மிகுந்த மரியாதை வைத்திருக்கிறார் சரத். இருவரும் மண்ணின் மைந்தர்கள்தான். தமிழர்தான் ஆள வேண்டும் என்ற கருத்தில் சரத் உடன்படுகிறார். வரும் காலங்களில் இருவரும் இணைந்து செயல்பட்டாலும் ஆச்சரியமில்லை" என்கின்றனர்.












Click it and Unblock the Notifications