சிறையில் ருசியாக சாப்பிட முடியாது-சாம்பார், தயிர் சாப்பாடு மட்டும் போதும்: பரோலில் சசிகலா கறார்
சென்னை: பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறைக்குள் மீண்டும் சென்றுவிட்டார் சசிகலா. பரோல் காலமான 5 நாட்களும் உணவு முறைகளில் பெரிதாக ஆர்வம் காட்டவில்லையாம். பெரும்பாலான நேரம் அமைதியாகவே இருந்தார் சசிகலா என்கின்றனர் அவரது உறவினர்கள்.
சென்னை குளோபல் மருத்துவமனையில் உடல்நலமில்லாமல் சிகிச்சை பெறும் கணவர் நடராஜனை சந்திப்பதற்காக பரோல் கேட்டு விண்ணப்பித்திருந்தார் சசிகலா. 15 நாள் பரோலை எதிர்பார்த்தவருக்கு, 5 நாட்கள் மட்டுமே கிடைத்தன.
மாநில அரசின் நெருக்குதல்கள்தான் இதற்குக் காரணம் என சசிகலா ஆதரவாளர்கள் கொதித்தனர். இந்த 5 நாட்களும் தி.நகரில் உள்ள கிருஷ்ணபிரியா வீட்டிலும் குளோபல் மருத்துவமனையிலும் மத்திய, மாநில உளவுப் பிரிவு அதிகாரிகள் குவிந்தனர்.

தொலைபேசிகள் கண்காணிப்பு
சசிகலாவைத் தொடர்பு கொள்ளும் ஆளும்கட்சி புள்ளிகள் யார் என்பதைக் கண்டறியும் பணிகள் வேகம் பெற்றன. இதுகுறித்து முதல்வர் அலுவலகத்தின் கவனத்துக்கு உடனுக்குடன் தகவல்கள் சென்றுள்ளன. சசிகலா ஆதரவு அமைச்சர்களின் தொலைபேசிகள், அவரது உதவியாளர்களின் எண்கள் ஆகியவற்றுக்கு சசிகலா தரப்பில் யாரெல்லாம் தொடர்பு கொள்கிறார்கள் என்பதையும் தீவிரமாக ஆய்வு செய்தனர். தன்னைச் சுற்றி நடக்கும் அனைத்து விஷயங்களையும் மவுனமாக பார்த்துக் கொண்டார் சசிகலா. குடும்பத்து ஆட்களுக்கு மட்டும் அடிக்கடி ஆலோசனை வழங்கினாராம்.

சொந்தங்களுக்கு தனி சமையல்
போயஸ் கார்டனில் இருந்தவரையில் தனக்கு வேண்டியதை சமைத்து சாப்பிடுவார் சசிகலா. இதற்காக மன்னார்குடியில் இருந்து வரவழைக்கப்பட்ட சமையல்காரர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். அப்போலோவில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்ட காலத்தில் மருத்துவமனை சாப்பாடுகளை சசிகலா உடல் ஏற்றுக் கொள்ளவில்லை. இதையடுத்து, மருத்துவமனையின் கீழ்தளத்தில் சசிகலாவுக்காக தனி சமையல் அறையே செயல்பட்டது. காலையில் வெண்பொங்கல், இட்லி, தோசை ஆகிய உணவுகளும் மதியம் சாப்பாடும் இரவு டிபன் வகைகளும் தயார் செய்யப்பட்டன. மன்னார்குடி குடும்பத்தினருக்கு மட்டும் இந்த உணவுகள் வழங்கப்பட்டன.

ரூபாவால் வீட்டு சப்பாடுக்கு தடை
ஜெயலலிதா இறந்த பிறகு, கார்டனுக்குத் தேடி வந்த சொந்தக்காரர்களுக்கு விதம்விதமான அசைவ உணவுகளை தயார் செய்து கொடுத்தது சமையல்காரர்கள் டீம். இந்நிலையில், சிறைத்துறை டி.ஐ.ஜி ரூபாவின் கெடுபிடியால் வீட்டில் இருந்து வரவழைக்கப்பட்ட உணவுகளை தடை செய்துவிட்டனர் பெங்களூரு சிறை அதிகாரிகள். அதற்கு முன்பு அமைச்சர் ஒருவரின் ஏற்பாட்டின்பேரில் வேண்டிய உணவுகளைச் சாப்பிட்டு வந்தார் சசிகலா. ஆனால் 5 நாட்கள் பரோல் காலத்தில் உணவுகளை விரும்பி சாப்பிடுவதைக் குறைத்துக் கொண்டாராம் சசிகலா.

சாம்பார், தயிர் மட்டுமே..
உணவு நேரத்தில் சாம்பார் சாப்பாடு, தயிர் சாப்பாடுதானாம்... நல்ல சாப்பாடு இல்லாமல் ரொம்பவே கஷ்டப்பட்டுவிட்டீர்கள். இப்போதாவது சாப்பிடுங்கள் எனக் குடும்பத்து நபர்கள் கூறியபோது, ஐந்து நாட்களுக்கு அப்புறம் ஜெயில் சாப்பாடுதான். இப்ப வாய்க்கு ருசியாக சாப்பிட்டுவிட்டால், பிறகு கஷ்டப்பட வேண்டியது வரும். எனக்காக மெனக்கெட வேண்டாம் என உறுதியாகக் கூறிவிட்டாராம் சசிகலா. பெரும்பாலான நேரம் பூஜை செய்வதில் ஆர்வம் செலுத்தினாராம் சசிகலா. அவரிடம் பேச வந்தவர்களிடமும் சைகையால் பலவற்றை உணர்த்தினார். விவாதம் நடத்தினால், தேவையில்லாமல் வெளியில் செய்தி கசியும் என்பதுதான் காரணமாம். முன்பைவிட, ஒவ்வொரு விஷயத்தையும் ஆழ்ந்து யோசித்தே பேசினாராம் சசிகலா.












Click it and Unblock the Notifications