என்னே ஒரு குரூரம்! ஜெ. உயிருக்கு போராடிய போது சசி தலைமையில் அணிவகுப்பு நடத்திய மன்னார்குடி கோஷ்டி!
ஜெயலலிதா மரணத்தைத் தழுவும் போது கண்ணீர் சிந்தாமல் மகிழ்ச்சியாக சசிகலா தலைமையில் மன்னார்குடி கோஷ்டி அப்பல்லோவிலேயே அணிவகுப்பு நடத்திய தகவல் அதிமுகவினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
சென்னை: ஜெயலலிதா மரணத்தை தழுவும் நிலையில் கதறியழாமல் ஜேம்ஸ் பாண்ட் கோட்டுடன் சசிகலா தலைமையில் மன்னார்குடி கோஷ்டி அப்பல்லோ மருத்துவமனையில் அணிவகுப்பு நடத்திய செய்தி அதிமுக தொண்டர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
ஜெயலலிதா மரணம் தொடர்பாக தொடக்கம் முதலே பலரும் சந்தேகங்களை எழுப்பி வருகின்றனர். அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ராஜ்யசபா எம்பி சசிகலா புஷ்பா இது தொடர்பாக கேள்வி எழுப்பி வருகிறார்.
நேரில் பார்த்த சாட்சியம்
தற்போது அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரும் எம்ஜிஆர் காலத்தில் சட்டசபை சபாநாயகராக இருந்தவருமான பிஹெச் பாண்டியன், அவரது மகனும் அதிமுகவின் வழக்கறிஞர் அணி செயலர், ராஜ்யசபா எம்பியுமாக இருந்த மனோஜ் பாண்டியன் ஆகியோரும் ஜெயலலிதா மரணம் தொடர்பாக திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டுள்ளனர். ஜெயலலிதா உயிருக்கு போராடிய டிசம்பர் 5-ந் தேதி இரவு சசிகலாவும் அவரது உறவினர்களும் துளிகூட கண்ணீரிவிடவில்லை என்பதை பிஹெச் பாண்டியன் நேரில் பார்த்த சாட்சியமாக கூறுகிறார்.
அணிவகுப்பு நடத்தினார்களாம்
அத்துடன் இனி அதிமுகவும் ஆட்சியும் தங்களுக்கானது என்கிற தோரணையில் சசிகலா ஜேம்ஸ் பாண்ட் கோட்டு அணிந்து கொண்டு மன்னார்குடி கோஷ்டியுடன் அப்பல்லோ மருத்துவமனைக்குள்ளேயே அணிவகுப்பு நடத்தி ஆட்டம் போட்ட அவலத்தையும் அம்பலப்படுத்தியுள்ளார் பிஹெச் பாண்டியன். ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகத்தை தொடர்ச்சியாக தெரிவித்து வரும் அதிமுக தொண்டர்களை இந்த தகவல் கடும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
சந்தேகங்களை உறுதி செய்யும் சசி
அதிமுகவையும் கட்சியையும் கைப்பற்றி தம்மை பதவியில் இறக்க சதி செய்கிறது மன்னார்குடி கோஷ்டி என 2011-ம் ஆண்டு ஜெயலலிதா அறிக்கை மூலமாக அறிவித்தது உண்மைதானோ என்பதை தற்போது முதல்வர் பதவியையும் சசிகலா கைப்பற்றியிருப்பதன் மூலம் உறுதி செய்திருக்கிறது மன்னார்குடி கோஷ்டி. இவ்வளவு தகவல்களை சொல்லும் பிஹெச் பாண்டியன், மனோஜ் பாண்டியன் அடுத்த என்ன குண்டை தூக்கிப் போடுவார்களோ என்ற பதபதைப்புடன் இருக்கிறது அதிமுக வட்டாரங்கள்.