ஜெ. அதிகாரத்தை பயன்படுத்தி சேர்த்த சொத்துகள்... எது தப்பும்.. பீதியில் மன்னார்குடி குடும்பங்கள்!
ஜெயலலிதாவின் அதிகாரத்தை பயன்படுத்தி சசிகலாவின் குடும்பத்தார் வாங்கி சேர்த்த சொத்தில் எது சிக்கும், எது தப்பும் என்ற அச்சத்தில் மன்னார்குடி குடும்பத்தினர் உள்ளனராம்.
Recommended Video
சென்னை : ஜெயலலிதாவின் பெயரை பயன்படுத்தி சசிகலாவின் குடும்பத்தினர் சேர்த்த சொத்துகளில் வருமான வரி சோதனையின் போது எது சிக்கும் எது தப்பும் என்ற அச்சத்தில் உள்ளனராம் அவர்களது குடும்பங்களைச் சேர்ந்தவர்கள்.
அதிமுகவை ஜெயலலிதா கைப்பற்றக் காரணமாக இருந்தவர்களில் தனக்கு முக்கிய பங்கு இருந்தது என்று இன்றும் மார்தட்டி சொல்லும் ம.நடராஜன், சசிகலா. ஏதோ கட்சி வளரவேண்டுமே என்ற தியாகத்திற்காகவோ அல்லது ஜெயலலிதாவின் அதிகாரத்தை நிலைநாட்டவோ மட்டுமே இதை செய்துவிடவில்லை. ஜெயலலிதாவின் அதிகாரத்தையும் செல்வாக்கையும் பயன்படுத்தி இவர்கள் வாங்கிக் குவித்த சொத்துகளே இதற்கு ஒரு சாட்சி.
மன்னார்குடியில் சாதாரண மெடிக்கல் நடத்தி வந்தவரின் மகளான சசிகலா மற்றும் அவரது சகோதரர்கள் இன்று கோடிகளில் புரள்கின்றனர். இதற்கெல்லாம் வழி வகுத்தது ஜெயலலிதாவுடன் சசிகலா நெருக்கமானது. ஜெயலலிதா ஆட்சியில் இருந்தாலும் நிழல் உலகில் அதிகாரம் செய்த சசிகலாவின் குடும்பத்தினர் ஏராளமானவர்களின் சொத்துகளை மிரட்டிப் பறித்தனர்.
மிரட்டி வாங்கிய சொத்துகள்
இசையமைப்பாளர் கங்கையமரனின் பங்களாவை மிரட்டி வாங்கியதா அவரே தெரிவித்திருந்தார். அது மட்டுமல்ல சென்னை மயிலாப்பூரில் அமிர்தாஞ்சன் மாளிகையை மிரட்டிப் பறித்தது, கோடநாடு எஸ்டேட் உரிமையாளரிடம் அதனை மிரட்டி வாங்கியது என்று ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பிறகு ஒவ்வொரு உண்மைகளாக வெளி வந்தன.
கணக்கு காட்ட போலி நிறுவனங்கள்
இப்படியாக 30 ஆண்டில் சசிகலா குடும்பத்தினர் பல வகையிலும் சொத்துகளை சேர்த்தனர். இந்த சொத்துகளுக்கெல்லாம் கணக்கு காட்டுவதற்காக போலி நிறுவனங்கள் பல தொடங்கப்பட்டு அதன் மூலம் பணம் கணக்கு காட்டப்பட்டது. சொத்துகளுக்கான முதலீடுகளுக்கான வழிகளாக இவை பயன்படுத்தப்பட்டன. இந்த போலி நிறுவனங்கள் செயல்படவே செயல்படாது ஆனால் இவை மூலம் பணப்பரிவர்த்தனை மட்டும் நடக்கும். இதே போன்று இந்த நிறுவனங்களின் பங்குகளை அதிக விலை கொடுத்து வாங்கியதாகவும், நம்பத்தன்மை அடிப்படையில் கடன் அளிப்பது உள்ளிட்ட வழிகளை பின்பற்றி பண நடமாட்டம் மட்டுமே நடத்தப்படும்.
ஏன் ரெய்டு?
மத்திய கம்பெனிகள் துறையின் தொடர் கண்காணிப்பில் இந்த போலி நிறுவனங்களின் செயல்பாடுகள் கண்காணிக்கப்பட்டு வந்துள்ளன. இவற்றில் சுமார் 10 போலி நிறுவனங்களின் உரிமத்தை கடந்த செப்டம்பர் மாதத்தில் மத்திய அரசு நிராகரித்துள்ளது. இதன் தொடர்ச்சியாகவே போலி நிறுவனங்களை நிர்வகித்து வருவதில் முக்கிய பங்காற்றுபவர்களாக இளவரசியின் வாரிசுகள் இருப்பதாலேயே வருமான வரித்துறையின் பூதக்கண்ணாடி 5 நாட்களைக் கடந்து ஆவணங்களை சரிபார்த்து வருகிறது.
மிஞ்சுமா சொத்துகள்?
ஆனால் பலரையும் ஏமாற்றி, மிரட்டி பறித்து கட்டிக் காப்பாற்றி வரும் ஆயிரக் கணக்கான சொத்தில் எது தப்பும், எது மிஞ்சும் என்ற அச்சம் சசிகலா குடும்பத்திற்கு உள்ளதாக தெரிகிறது. எங்களுக்கு பயமில்லை என்று தினகரன் மீடியாக்களிடம் சொன்னாலும் மொத்த குடும்பமுமே 5 நாட்களாக விவேக், கிருஷ்ணப்ரியா வீட்டில் நடக்கும் ரெய்டில் என்னென்ன கைநழுவப் போகிறதோ என்ற அச்சம் அனைவரிடமுமே உள்ளது.