ஜெயிலுக்கு பயந்து மருத்துவமனையில் பதுங்கிய நடராஜன்!
சொகுசு கார் இறக்குமதி வழக்கில் சசிகலாவின் கணவர் நடராஜனுக்கு சிறைத்தண்டனை உறுதியாகியுள்ள நிலையில் அவர் திடீரென மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Recommended Video

சென்னை: லக்ஸஸ் கார் இறக்குமதி வழக்கில் சசிகலாவின் கணவர் ம.நடராஜனக்கு சிறைத்தண்டனை உறுதியான நிலையில் அவர் திடீரென மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
லண்டனில் இருந்து 1994ல் லக்ஸஸ் காரை போலி ஆவணங்கள் கொடுத்து இறக்குமதி செய்ததன் மூலம் ரூ. 1.62 கோடி மோசடி செய்ததாக நடராஜன், பாஸ்கரன் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்கு பதியப்பட்டது. இந்த வழக்கில் சிபிஐ நீதிமன்றம் 4 பேருக்கும் 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது. இந்த தண்டனையை எதிர்த்து நடராஜன், பாஸ்கரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர்.
மேல்முறையீட்டு வழக்கில் நேற்று தீர்ப்பளித்த சென்னை உயர்நீதிமன்றம் சிபிஐ நீதிமன்றம் அளித்த தண்டனையை உறுதி செய்தது. இதனால் நடராஜன் உடனடியாக சரணடைய வேண்டிய நிலை உருவாகியுள்ளது. ஒரு வேளை இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்தாலும் அதற்கு உச்சநீதிமன்றத்திற்கு செல்ல வேண்டும்.

மருத்துவமனையில் தஞ்சம்
சட்டவிதிகளின் படி நடராஜனின் சிறை சென்று அதன் பின்னரே மேல்முறையீடு செய்ய முடியும். ஆனால் கடந்த அக்டோபரில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டுள்ள நடராஜன் உடல்நிலையைக் காரணம் காட்டி சிறைத் தண்டனையில் இருந்து தப்ப முடியுமா என்று அவரது சகாக்கள் வேலை செய்து வருகின்றனர்.

சிறை சென்றாக வேண்டும்
சட்டப்படி அதற்கு வாய்ப்பு இல்லை என்பதே சட்ட வல்லுநர்களின் கருத்தாக இருக்கிறது. அவர் மருத்துவமனையில் ஓய்வு எடுப்பதை குற்றவாளியாக வந்து சிறைத்துறை மருத்துவமனையில் ஓய்வு எடுக்கட்டும் என்றே நீதீமன்றம் சொல்லும் என்று சட்ட நுணுக்கங்களை அறிந்தவர்கள் கூறுகின்றனர். மேலும் நடராஜன் சிறைக்கு செல்வதில் இருந்து தடுக்கும் அதிகாரம் சிபிஐ நீதிமன்றத்திற்கு இல்லை என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

பெசன்ட் நகர் வீட்டில் இல்லை
இந்நிலையில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை முடிந்து நவம்பர் முதல்வாரத்தில் வீடுதிரும்பிய நடராஜன் தன்னுடைய பெசன்ட் நகர் வீட்டில் தங்காமல் உறவினர் ஒருவரின் வீட்டிலேயே தங்கி இருந்ததாக தெரிகிறது. பார்வையாளர்களைத் தவிர்க்கவே அவர் வேறு இடத்தில் தங்கியதாக சொல்லப்படுகிறது.

மீண்டும் மருத்துவமனையில்
மேலும் அன்றாடம் தான் சிகிச்சை பெற்று வந்த பெரும்பாக்கத்தில் உள்ள குளோபல் மருத்துவமனைக்கும் சென்று பரிசோதனைக்காக சென்று வந்துள்ளார் நடராஜன். இந்நிலையில் நேற்று சோதனைக்காக மருத்துவமனை சென்றவர் அங்கேயே தங்கிவிட்டதாகத் தெரிகிறது. கைதில் இருந்து தப்பிக்க எல்லா அரசியல்வாதிகளும் செய்யும் பழைய பிளான் தான் இது என்றாலும் இதன் மூலம் சிறை செல்லாமல் தப்பித்து உச்சநீதிமன்றத்தில மேல்முறையீடு செய்யலாம் என்பதே பிளானாம்.

நீதிமன்றத்தால் அறிவிக்கப்படலாம்?
ஆனால் அதற்கு சட்டத்தில் இடம் இல்லையே என்பது தான் இப்போதைய விவாதம். எனவே நடராஜன் தானாக முன்வந்து ஆஜராகாவிட்டால் அவர் நீதிமன்றத்தால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட வாய்ப்புகள் அதிக அளவில் இருக்கின்றன. எனவே விரைவில் ஒரு அடிதடி கைதும் அரங்கேற வாய்ப்பு இருப்பதாகவே தெரிகிறது.












Click it and Unblock the Notifications