இரட்டை இலை விவகாரம்.. தேவையில்லாமல் வாய்தா வாங்குகிறது சசிகலா குரூப்.. கேபி முனுசாமி குற்றச்சாட்டு
இரட்டை இலை விவகாரத்தில் சசிகலா தரப்பு வேண்டுமென்றே வாய்தா வாங்கிக்கொண்டிருப்பதாக முன்னாள் அமைச்சர் கேபி முனுசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை: இரட்டை இலை விவகாரத்தில் போதுமான ஆவணங்கள் இல்லாததால் சசிகலா தரப்பு வேண்டுமென்றே வாய்தா வாங்கிக்கொண்டிருப்பதாக முன்னாள் அமைச்சர் கேபி முனுசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
இரட்டை இலைச்சின்னத்துக்கு சசிகலா தரப்பும் ஈபிஎஸ்- ஓபிஎஸ் தரப்பும் போராடி வருகின்றன. இதற்காக இருதரப்பும் மாறி மாறி பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்துள்ளன.
இதுதொடர்பான வழக்கு தேர்தல் ஆணையத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு டெல்லி தலைமை தேர்தல் ஆணையத்தில் நாளை மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது.
ஓபிஎஸ் டீம் டெல்லி பயணம்
இதற்காக ஓபிஎஸ் தரப்பைச் சேர்ந்த முன்னாள் அமைச்சரும் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளருமான கேபி முனுசாமி உள்ளிட்டோர் இன்று டெல்லி புறப்பட்டனர். முன்னதாக சென்னை விமான நிலையத்தில் கேபி முனுசாமி செய்தியாளர்களிடம் பேசினார்.
தாமதப்படுத்துகின்றனர்..
அப்போது இரட்டை இலைச் சின்னம் விவகாரத்தில் தாங்கள் போலி பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்யவில்லை என அவர் கூறினார். போலி ஆவணங்கள் எனக்கூறி தினகரன் தரப்பு விசாரணையை தாமதப்படுத்துவதாகவும் அவர் கூறினார்.
நாளையுடன் முடியும்
இரட்டை இலை சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரிப்பது நாளையே இறுதியாக இருக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். சசிகலா தரப்புக்கு போதுமான ஆவணங்கள் இல்லாததால் விசாரணை முடியும் நிலையில் ஏதையாவது கூறி வேண்டுமென்றே வழக்கை தாமதப்படுத்துவதாகவும் அவர் கூறினார்.
வேண்டுமென்றே வாய்தா
இரட்டை இலை விவகாரத்தில் சசிகலா தரப்பு வேண்டுமென்றே வாய்தா வாங்கிக்கொண்டிருப்பதாக முன்னாள் அமைச்சர் கேபி முனுசாமி குற்றம் சாட்டியுள்ளார். மேலும் இரட்டை இலை தங்களுக்கே கிடைக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.