ஐசியுவில் கணவர் நடராஜன்.. விரைவில் குணமடைய லிங்காபிஷேகம் செய்த சசிகலா
சசிகலாவின் கணவர் நடராஜன் கல்லீரல் கோளாறு காரணமாக சிகிச்சை பெற்று வருகிறார். ஐசியுவில் சிகிச்சை பெற்று வரும் கணவரை நினைத்து கவலையடைந்துள்ளாராம் சசிகலா.
Recommended Video
சென்னை: சசிகலாவின் கணவருக்கு சென்னை தனியார் மறுத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. டயாலிசிஸ் சிகிச்சை பெற்று வரும் கணவர் உடல்நலமடைய லிங்கத்திற்கு அபிஷேகம் செய்து வழிபட்டாராம் சசிகலா.
சசிகலாவின் கணவர் நடராஜனுக்கு கடந்த சில மாதங்களாகவே கல்லீரலில் பிரச்சினை உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.
குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடராஜனுக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்வதற்காக லண்டனில் இருந்து சிறப்பு மருத்துவர் வந்திருப்பதாக கூறப்படுகிறது.
கல்லீரல் நுரையீரல் பிரச்சினை
நடராஜன் உடல்நிலையில் எந்த மாற்றமும் இல்லை. மயக்க நிலை எதுவும் இல்லை. நன்றாக பேசிக் கொண்டிருக்கிறார்.
உடல் பரிசோதனையில் சிறுநீரகம், கல்லீரல் பாதிக்கப்பட்டிருப்பதும் நுரையீரலில் தண்ணீர் சேர்ந்து இருப்பதும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
தொடர் கண்காணிப்பு
தற்போதைய நிலையில் கல்லீரல் கண்டிப்பாக மாற்ற வேண்டிய நிலையில் உள்ளது. சிறுநீரக பாதிப்பை சீர் செய்ய முடியுமா? மாற்ற வேண்டுமா? என்பது தொடர் சிகிச்சையில்தான் தெரிய வரும். மருத்துவ குழுவினர் அவரது உடல் நிலையை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
சசிகலா பிரார்த்தனை
தன் கணவர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வரும் தகவல் அறிந்த சசிகலா வேதனை அடைந்துள்ளார். பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா லிங்கத்துக்கு ஜல அபிஷேகம் செய்து கணவர் உடல்நலம் பெற வேண்டிக் கொண்டார்.
இளவரசி ஆறுதல்
கணவரை நினைத்து கவலையடைந்திருக்கும் சசிகலாவை அவரது அண்ணன் மனைவி இளவரசிதான் ஆறுதல் கூறி தேற்றி வருகிறார். இதுவரை பரோல் கேட்டு சசிகலா விண்ணப்பிக்கவில்லை.
பரோல் கேட்க வாய்ப்பு
மகாதேவன் இறந்தபோதும், அண்ணி சந்தானலட்சுமி மரணமடைந்த போதும் சசிகலா பரோலில் வரவில்லை. உடல்நலமில்லாமல் இருக்கும் தனது கணவரை பார்க்க சசிகலா பரோலில் வர வாய்ப்புள்ளது என்றே சிறை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. உச்சநீதிமன்றத்தில் பரோல் கேட்டு சசிகலா மனுதாக்கல் செய்வார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.