ராஜ்யசபாவில் "பவ்யமாக" பகிரங்க மன்னிப்பு.... திமுகவில் இணைகிறார் 'கதறல்' சசிகலா புஷ்பா?
சென்னை: ராஜ்யசபாவில் தமிழக முதல்வர் ஜெயலலிதா மீது துணிச்சலாக புகார் கூறியதுடன் "பவ்யமாக" திமுக தலைவர்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கோரினார் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட எம்.பி. சசிகலா புஷ்பா. இதனால் அவர் திமுகவில் இணைவதற்கான சாத்தியங்கள் இருப்பதாகவே கூறப்படுகிறது.
அதிமுகவில் திடீரென விஸ்வரூப வளர்ச்சி கண்டவர் சசிகலா புஷ்பா. கடந்த சில ஆண்டுகளாக அடிக்கடி தொடர் சர்ச்சைகளில் இவர் சிக்கி வருகிறார்.
அண்மையில் திமுக எம்பி திருச்சி சிவாவுடன் சசிகலா புஷ்பா நெருக்கமாக இருப்பதாக சில புகைப்படங்கள் வந்தன. இவை மார்பிங் என்றும் உண்மை என்றும் மாறி மாறி கூறப்பட்டன.

மேலிட விசாரணை
இந்த நிலையில் டெல்லியில் திருச்சி சிவாவை சசிகலா புஷ்பா சரமாரியாகத் தாக்கினார். நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து இரு கட்சித் தலைமைகளும் விசாரணை நடத்தின. திருச்சி சிவாவிடம் இது தொடர்பாக விசாரணை நடத்தினார் திமுக தலைவர் கருணாநிதி. அதேபோல் சசிகலா புஷ்பாவிடமும் ஜெயலலிதா விசாரணை நடத்தியதாக கூறப்பட்டது.
ஜெ. மீது புகார்
இதனிடையே திடீரென ராஜ்யசபாவில் ஜெயலலிதா மீது பரபரப்பு புகாரைக் கூறி அதிர வைத்தார் சசிகலா புஷ்பா. ஜெயலலிதா அறைந்தார்; சித்ரவதை செய்தார்; ராஜினாமா செய்ய வலியுறுத்தினார் என்றெல்லாம் கண்ணீரும் கம்பலையுமாக கூறினார் சசிகலா.

ட்விஸ்ட் வைத்த சசிகலா
இதற்கு அடுத்து அவர் வைத்த ட்விஸ்ட்தான் அதிரடியானது. திடீரென ரொம்பவே பவ்யமாக, திருச்சி சிவா எம்.பி. ரொம்பவும் நாகரீகமானவர்; சில நிமிடங்கள் உணர்ச்சிவசப்பட்டதால் நான் அவ்வாறு நடந்து கொண்டேன்.

பவ்யமாக மன்னிப்பு
இதற்காக திருச்சி சிவாவிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். அதேபோல் திமுக தலைவர்களிடமும் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்று பேசியது ஆச்சரியப்பட வைத்தது.

திமுகவில் ஐக்கியம்?
எம்.பி. பதவியை ராஜினாமா செய்யவே முடியாது என்று ஜெயலலிதாவுக்கு சவால்விட்டதும் திமுகவிடம் பவ்யமாக பகிரங்கமாக மன்னிப்பு கோரியதும் ஆச்சரியத்தை ஏற்படுத்தக் கூடியதாகத்தான் இருக்கிறது. திமுகவில் சேருவதற்கான ஒப்புதலைப் பெற்றுவிட்ட காரணத்தாலேயே திடீரென ஜெயலலிதாவுக்கு சவால்விட்டு திமுகவிடம் பகிரங்கமன்னிப்பு கேட்டிருக்கலாம் சசிகலா புஷ்பா என்கின்றன விவரமறிந்த வட்டாரங்கள்.

இவ்வளவு தைரியம்
ஜெயலலிதா மீது புகார் கூறிவிட்டு தைரியமாக நடமாட வேண்டும் எனில் நிச்சயம் பலமான ஒரு கட்சியின் ஆதரவு சசிகலா புஷ்பாவுக்கு தேவை. அது தற்போதைக்கு திமுகவைத் தவிர வேறு எதுவும் இல்லை என்பதே நிதர்சனம் என்றும் சுட்டிக்காட்டப்படுகிறது.
எல்லாமும் நடக்கும்!!












Click it and Unblock the Notifications