அதிமுகவை என்னிடம் இருந்து எந்த சக்தியாலும் பிரிக்க முடியாது.. சசிகலா ஆவேசம்!
அதிமுகவை என்னிடம் இருந்து எந்த சக்தியாலும் பிரிக்க முடியாது என்று சசிகலா ஆவேசமாக பேசியுள்ளார்.
சென்னை: நான் எந்த மாநிலத்தில் இருந்தாலும் என்னுடைய மனமெல்லாம் கட்சி மீதே இருக்கும். அதிமுகவை என்னிடம் இருந்து எந்த சக்தியாலும் பிரிக்க முடியாது என்று அக்கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் சசிகலா கூறியுள்ளார்.
கூவத்தூர் ரிசார்ட்டில் அதிமுக எம்.எல்.ஏ.,க்களை சிறை வைத்துள்ள சசிகலா நேற்றிரவு முதல் தானும் அங்கேயே தங்கி இருந்தார். இன்று சசிகலாவுக்கு எதிராக சொத்துக் குவிப்பு வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதையடுத்து பெங்களூரு நீதிமன்றத்தில் உடனடியாக சரணடையை சசிகலாவுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து அதிமுகவின் புதிய சட்டமன்ற குழு தலைவராக எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். மாலையில் ஆளுநரை சந்தித்த எடப்பாடி பழனிச்சாமி, பெரும்பான்மை எம்.எல்.ஏக்களின் ஆதரவு தனக்கு இருப்பதாக கூறி ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்கும் படி கோரிக்கை விடுத்தார்.
இந்நிலையில், இன்று இரவு கூவத்தூர் ரிசார்ட்டில் அதிமுக எம்.எல்.ஏக்கள் மத்தியில் பேசிய சசிகலா, பெரும்பான்மை எம்எல்ஏக்களின் ஆதரவு நமக்கு உள்ளது. சட்டமன்ற குழுத் தலைவரை தேர்வு செய்த பின்னரும் ஆட்சி அமைக்க அழைக்காமல் தாமதம் செய்வது ஏன்? என கேள்வி எழுப்பினார்.
மேலும் அவர் பேசுகையில், எனக்கு வந்துள்ளது தற்காலிக பிரச்சனை தான். அதை என்னால் சமாளிக்க முடியும். என்னைத்தான் சிறையில் அடைக்க முடியும், உங்கள் மேல் கொண்ட பாசத்தையோ, கட்சியின் மீதான அக்கறையையோ சிறையிலடைக்க முடியாது. நான் எந்த மாநிலத்தில் இருந்தாலும் என்னுடைய மனமெல்லாம் கட்சி மீதே இருக்கும். கட்சிக்காக அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும்.
கூடிய விரைவில் ஆட்சி அமைப்போம். சட்டசபையில் ஜெயலலிதாவின் படத்தை வைப்போம். அ.தி.மு.க.,வை அழிக்க நினைக்கும் தி.மு.க., என்ற ஒரு கட்சி இருக்க கூடாது. அதிமுகவை என்னிடம் இருந்து எந்த சக்தியாலும் பிரிக்க முடியாது என்றார்.