எங்கே செல்கிறது தேசம்! நல்ல 'வருமானம்' கிடைக்கும் பள்ளிகள் விற்பனைக்கு...
சென்னை: இங்கு லாபமீட்டும் நல்ல பள்ளி விற்பனைக்கு உள்ளது. ஆண்டுக்கு சில கோடிகளை அறுவடை செய்யலாம், என்பதுபோன்ற விளம்பரங்கள் பகிரங்கமாக பத்திரிகைகளில் வெளியாகி கல்வி வியாபாரமாகி போனதன் விபரீத விளைவை புடம் போட்டு காண்பிக்கின்றன.
கல்வியையும், சாப்பாட்டையும் காசுக்கு விற்க கூடாது என்பது கல்தோன்றி மண்தோன்றா காலத்து முன்தோன்றிய தமிழர் மரபு. ஆனால் துரதிருஷ்டம் என்னவென்றால் இப்போது இந்த இரண்டும்தான் பணத்தை அறுவடை செய்யும் விளை நிலங்களாக மாறிப்போயுள்ளன.
என்ன கொடுமை சார்
சமீபகாலமாக இணையதளம், பத்திரிகைகளின் விளம்பர பக்கங்களில் பள்ளிகளை விற்பனை செய்வது குறித்த விளம்பரங்களை அதிகம் பார்க்க முடிகிறது. காரோ, பைக்கோ, நிலமோ என்றால் அதில் ஆச்சரியம் ஏற்படாது. கல்வியை கற்பிக்கும் நிலையங்கள் கொத்தாக விற்பனை செய்யப்படுவது எங்கோ இடிப்பதை உணர்த்துகிறது.
ஆண்டுக்கு 2 கோடி உறுதி
ஆன்லைன் விளம்பரம் ஒன்றில் சமீபத்தில் பார்த்த வாக்கியம் இது. "ரூ.15 கோடிக்கு பள்ளி விற்பனைக்கு! பேரம் கிடையாது! ஆண்டுக்கு ரூ.2 கோடி வருமானம் உறுதி!". இதைப்பார்த்தால் யாராக இருந்தாலும் தூக்கிவாரி போடுவது நிச்சயம்.
கொடுத்து வாங்குறோம்
இந்த விளம்பரத்தை அளித்துள்ளது பெங்களூர் நகரின் ஒசூர் சாலையிலுள்ள ஒரு பள்ளி நிர்வாகம். சாய் அறக்கட்டளை என்ற பெயர் கொண்ட அமைப்பு நடத்தும் பள்ளிக்குதான் இந்த விளம்பரம். இதுகுறித்து அந்த அறக்கட்டளையின் சார்பில் பேசிய பிரவீன் கூறுகையில் "நாங்கள் வேறு ஒரு கல்வி நிறுவனத்தை தொடங்க உள்ளோம். எனவே நிதி திரட்டும் நோக்கத்தில் ஏற்கனவே இயங்கி வரும் இப்பள்ளியை விற்பனை செய்ய முடிவு செய்து விளம்பரம் அளித்துள்ளோம்" என்றார்.
லாபம் பார்க்கலாம்
"இப்போது ஒரு மாணவரிடம் ரூ.15 ஆயிரம் நன்கொடை வசூலிக்கிறோம், புதிய நிர்வாகம், நன்கொடை தொகையை அதிகரித்தால், மேலும் லாபம் பார்க்கலாம்" என்றும் பிரவீன் தெரிவித்தார்.
கோவையிலும் அக்கப்போர்
பெங்களூரில் வெளியாகியுள்ள விளம்பரத்தை போலவே, கோவையிலுள்ள ஒரு பள்ளியை விற்பனை செய்ய இருப்பதாக பத்திரிகையில் விளம்பரம் செய்யப்பட்டிருந்தது. மேட்டுப்பாளையம் சாலையிலுள்ள அந்த பள்ளியை வாங்க விரும்புவோர் தொடர்புகொள்ளலாம் என்று பிரசுரித்த தொலைபேசி எண்ணில் 'புரோக்கர்' என்று கூறிக்கொண்டு, ஒருநபர் பேசினார்.
டீலா.. நோ டீலா
அந்த புரோக்கர் நபர் கூறுகையில், இப்பள்ளியில் அனைத்துவசதிகளும் உள்ளன. தேவைப்பட்டால் இப்போது பணியாற்றும் ஊழியர்களை வைத்துக்கொள்ளலாம். இல்லாவிட்டால் சம்பளம் குறைவாக கொடுத்து வேறு நபர்களை வேலைக்கு சேர்க்கலாம் என்றார்.
பல கட்ட பதிவு
இதுபோன்ற விளம்பரம் டெல்லியிலுள்ள ஒரு பள்ளி குறித்தும் வந்துள்ளது. பள்ளிகளை விற்பது குறித்து திங்-டாங் இந்திய இன்ஸ்ட்டிடியூட்டின் பலதேவன் ரங்கராஜு கூறுகையில் "பள்ளியை பதிவு செய்வது பல கட்டங்களாக நடக்கிறது. பள்ளியை நடத்தும் அறக்கட்டளை அல்லது சொசைட்டி பதிவு செய்யப்பட வேண்டும், மாநில அரசிடமிருந்து பள்ளியை நடத்த அனுமதி பெற்றிருக்க வேண்டும்" என்றார்.
விற்பதை தடுக்க முடியாது
குழந்தைகள் நலம் மற்றும் கல்வி தொடர்பாக போராடிவரும் அமைப்பின் ரென்னி டிசோசா இதுபற்றி கூறுகையில், "பள்ளியை விற்பதற்கு தடை விதிக்க முடியாது. நிறுவனத்தின் மேலாண்மை மாறுவதை போலத்தான் இதுவும். எனவே பள்ளிகளை விற்பதை சட்ட விரோதம் என்று கூறிவிட முடியாது. ஆனால் பணம் அறுவடை செய்யும் இடம்போல விளம்பரங்களில் காண்பிப்பது சரியில்லை" என்றார்.