இராமநாதபுரத்தில் முஸ்லிம்கள் பேரணியில் போலீஸ் துப்பாக்கிச் சூட்டுக்கு எஸ்.டி.பி.ஐ கண்டனம்
இராமநாதபுரம்: இராமநாதபுரத்தில் முஸ்லிம்கள் மீது காவல்துறை கொடூர தாக்குதல் நடத்தியுள்ளசம்பவத்திற்கு எஸ்.டி.பி.ஐ கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து, எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெஹ்லான்பாகவி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது
இராமநாதபுரத்தில் பாப்புலர்ஃ ப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் துவக்க தினமான பிப்ரவரி 17 ம் தேதி பேரணி மற்றும் பொதுக் கூட்டத்திற்கு போலீசாரிடம் முறையாக அனுமதி பெறப்பட்டிருந்தது.
ஆனால், பேரணி துவங்கும் நேரத்தில் காவல்துறை அதிகாரிகள்அனுமதி மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த குழப்பத்தை பயன்படுத்தி ஏற்கனவே ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசமிகள் சிலர் கூட்டத்தின் மீது கல்வீசி தாக்கினர்.
இதை காரணம் காட்டி கூட்டத்தினர் மீது மிக கொடூரமாக காவல்துறையினர் தடியடி தாக்குதல் நடத்தியதோடு தலைவர்கள் மற்றும் வழக்கறிஞர்களை குறி வைத்தும் தாக்கியுள்ளனர். தொடர்ந்து துப்பாக்கிச் சூடு சம்பவமும் நடைபெற்றது.
கல்வீசிய விசமிகள் சிலரை பொது மக்கள் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.இந்த தாக்குதல் மிகவும் திட்டமிட்டு காவல்துறையால் அரங்கேற்றப்பட்டதாகவே தெரிகிறது.
காவல்துறையின் வன்முறை வெறியாட்டமும், துப்பாக்கிச் சூடும் நடத்தியிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
கேரளா, கர்நாடகா உட்பட பல்வேறு மாநிலங்களில் மிக அமைதியான முறையில் பேரணியும், பொதுக் கூட்டமும் நடைபெற்றுள்ள நிலையில் தமிழகத்தில் மட்டும் காவல்துறையினரின் தாக்குதலும், அணுகுமுறையும் வேதனைக்குரியது.
நாடு முழுவதும் எத்தனையோ, ஊர்வலங்கள் பேரணிகள் நடைபெறும் போது, முஸ்லிம்கள் நடத்தும் பேரணி மற்றும் நிகழ்ச்சிகளில் மட்டும் காவல்துறையினரின் நடவடிக்கைகள் மிகவும் கண்டிக்கத்தக்கது.
மக்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டிய காவல்துறை, நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் இந்நேரத்தில் தமிழக அரசிற்கு எதிராக முஸ்லிம்களை திருப்ப முயற்சி செய்திருப்பது, அரசுக்கு எதிரான காவல்துறையின் சதியா என்ற கோணத்தில் தமிழக அரசு சிறப்பு புலனாய்வு மூலம் விசாரணை நடத்த வேண்டும்.
சிறுபான்மையினர் மீதான இந்தத்தாக்குதலுக்கு காரணமான அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்,
மேலும் ஊர்வலத்திற்கு பாதுகாப்பு வழங்காததோடு, வன்முறைக்கு காரணமான இராமநாதபுரம் காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் ஏ.டி.எஸ்.பிவெள்ளத்துரை ஆகியோரை உடனே இடமாற்றம் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது.