திமுக அல்லது பாஜக... விஜயகாந்திடம் கோரிக்கை வைக்கும் தேமுதிக
சென்னை: நாடாளுமன்றத் தேர்தலில் தனித்து போட்டியிடவேண்டாம், திமுக, அல்லது பாரதீய ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுங்கள் என்று தேமுதிகவினர் நேர்காணலின் போது விஜயகாந்திடம் வலியுறுத்தியுள்ளனர்.
நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி தமிழகத்தில் அரசியல் கட்சிகள் போட்டியிட விரும்புபவர்களிடம் இருந்து விருப்பமனுக்களை பெற்று நேர்காணலை நடத்தி வருகின்றன.
தேமுதிகவில் 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் போட்டியிடுவதற்காக விண்ணப்பித்த கட்சி நிர்வாகிகளிடம் நேர்காணல் நடத்தப்படும் என்று அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் அறிவித்தார். இதன்படி ஞாயிறன்று தொடங்கிய இந்த நேர்காணல், வருகிற 12-ந்தேதி வரை நடைபெறுகிறது.
முதல் நாளான நேற்று தஞ்சாவூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், சிதம்பரம், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை ஆகிய 10 தொகுதிகளுக்கு விஜயகாந்த் நேர்காணலை நடத்தினார். இதில் தேமுதிக நிர்வாகிகள் 300 பேர் வரை பங்கேற்றனர்.
யாருடன் கூட்டணி
நேர்காணலின் போது தேர்தலில் போட்டியிட விண்ணப்பித்தவர்களிடம் தொகுதியின் நிலவரம் பற்றி கேட்டறிந்த விஜயகாந்த், கூட்டணி தொடர்பாக கட்சி நிர்வாகிகள் என்ன நினைக்கிறார்கள் என்பது குறித்தும் கருத்து கேட்டார். அப்போது அவர்கள், திமுக அல்லது பா.ஜ.க கூட்டணியில் சேர்ந்து பாராளுமன்ற தேர்தலை சந்திக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்தனர்.
திமுக உடன் கூட்டணி
தமிழகத்தின் பெரிய கட்சிகளில் ஒன்றான திமுகவுடன் கூட்டணியில் இணைவதன் மூலம் கணிசமான தொகுதிகளில் வெற்றி பெறலாம் என்று தே.மு.தி.க. நிர்வாகிகள் பலர் கருத்து தெரிவித்ததாக தெரிகிறது.
பாஜக உடன் கூட்டணி
அதேபோல இன்னொரு தரப்பினர் பா.ஜ.க. அணியில் சேர்ந்தால்தான் கட்சியின் எதிர்காலம் நன்றாக இருக்கும் என்றும் அப்போதுதான் 2016 சட்டமன்ற தேர்தலில் திராவிட கட்சிகளுக்கு மாற்றாக தமிழகத்தில் நாம் பரிணமிக்க முடியும் என்றும் கருத்து தெரிவித்துள்ளனர்.
இன்னும் மூன்று நாட்களுக்கு
திங்கள்கிழமையன்று நீலகிரி, கோவை, பொள்ளாச்சி, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், கரூர், சேலம், திருச்சி, பெரம்பலூர் தொகுதிகளுக்கு நேர்காணல் நடைபெறுகிறது. 11ஆம் தேதி கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம், தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை தொகுதிக்கும் நேர்காணல் நடைபெறுகிறது. தொடர்ந்து 12ஆம் தேதி வேலூர், ஆரணி, அரக்கோணம், ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம், திருவள்ளூர், வடசென்னை, மத்திய சென்னை, தென்சென்னை, புதுச்சேரி தொகுதிக்கும் நேர்காணல் நடைபெறுகிறது.
பிப். 19ல் அறிவிப்பு
நேர்காணல் முடிந்து பரிசீலனைக்கு பின்னர் அதாவது பிப்ரவரி 19ம் தேதிதான் யாருடன் கூட்டணி என்பதை விஜயகாந்த் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தி.மு.க. அல்லது பா.ஜ.க. அணியில் சேர்ந்து நாடாளுமன்றத் தேர்தலை சந்தித்தால் மட்டுமே தே.மு.தி.க.வால் கணிசமான தொகுதிகளில் வெற்றி பெற முடியும். மாறாக தனித்து போட்டியிடுவது என்று விஜயகாந்த் முடிவை எடுத்தால் நிச்சயம் அது அக்கட்சிக்கு பயன் அளிக்காது என்று தேமுதிகவினர் நம்புகின்றனர்.
அதிக தொகுதிகளில் தேமுதிக
எந்த கூட்டணியில் சேர்ந்தாலும் அதிகமான இடங்களில் களமிறங்க தே.மு.தி.க. திட்டமிட்டுள்ளது. இது மட்டமே விஜயகாந்துக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியாகும் என்றும் அக்கட்சி நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளனர்.