ரகசிய வாக்கெடுப்பு... திமுகவின் கோரிக்கை நியாயமற்றது - வைகோ திடீர் பேட்டி
சட்டசபையில் ரகசிய ஓட்டெடுப்பு நடத்த வேண்டும் என்ற தி.மு.கவின் கோரிக்கை நியாயமற்றது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
சென்னை: சட்டசபையிலும், நாடாளுமன்றத்திலும் இல்லாத ஒரு நடைமுறையான ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற திமுக செயல்தலைவர் ஸ்டாலினின் கோரிக்கை நியாயமற்றது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
தமிழக அரசியல் நிலவரம் குறித்து கடந்த 15 நாட்களாக எந்தவித கருத்தும் கூறாமல் இருந்த வைகோ நம்பிக்கை வாக்கெடுப்பு பற்றி திடீர் பேட்டியளித்துள்ளார். ஈரோட்டில் நடைபெற்ற திருமண விழாவில் பங்கேற்க வந்த வைகோ, கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது அவர், திமுக செயல்தலைவர் ரகசிய ஓட்டெடுப்பு நடத்த வேண்டும் என கோரினார். தமிழகத்தில் இதற்கு முன்னர், மூன்று முறை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. ரகசிய வாக்கெடுப்பு என்பது சட்டசபையிலும், நாடாளுமன்றத்திலும் நடைபெற்றது கிடையாது என்றார்.
மாறி மாறி பேசுவதா?
நான் மிகுந்த கவனத் தோடு செய்தியாளர்களிடம் சுட்டிக்காட்டுக்கிறேன். சட்ட சபையில் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் 15 நாள் அவகாசம் கொடுத்தபோது, அது குதிரை பேரத்துக்கு வழிவகுக்கும் என்று சொன்ன ஸ்டாலின், தற்போது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த சட்டசபை உறுப்பினர்களுக்கு அவகாசம் கொடுக்க வேண்டும் என கேட்பது ஏன் என்று கேள்வி எழுப்பினார்.
தவறான தகவல்
ரகசிய ஓட்டெடுப்பு நடத்த வேண்டும் என்ற தி.மு.கவின் கோரிக்கை நியாயமானது இல்லை. சபாநாயகர் சட்ட மன்ற விதிகளின் படி சரியாகத்தான் நடந்து கொண்டார். ஓய்வுபெற்ற நீதிபதி மார்கண்டேய கட்ஜூ போன்றவர்கள் கூட ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று சொல்வது மிகவும் ஆச்சரியமாக உள்ளது. சட்டசபையில் நடந்த நிகழ்ச்சிகளால் இந்தியா முழுவதிலும் தவறான தகவல் பரவி வருகிறது என்று வைகோ கூறியுள்ளார்.
நம்பிக்கை வாக்கெடுப்பு
எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு பெரும்பான்மையை நிரூபிக்கும் பொருட்டு தமிழக சட்டசபையில் நேற்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. எம்எல்ஏக்கள் அனைவரும் மக்களை சந்தித்து விட்டு வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், எதிர்கட்சித்தலைவர் ஸ்டாலினும் முன் வைத்தனர். ஆனால், அந்த கோரிக்கைகளை சபாநாயகர் ஏற்கவில்லை.
எடப்பாடி பழனிச்சாமி வெற்றி
சட்டசபையில் அமளியில் ஈடுபட்ட திமுக உறுப்பினர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றிவிட்டு, நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தது. எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக 11 வாக்குகளும், ஆதரவாக 122 வாக்குகளும் போடப்பட்டன. இதனையடுத்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. சட்டசபையில் நேற்று நடந்த அமளி துமளியால் இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.