144 தடை உத்தரவால் வாக்காளருக்கு பணம் கொடுக்க வசதியாக இருந்தது: அன்புமணி
விழுப்புரம்: தேர்தல் ஆணையம் 144 தடையுத்தரவு பிறப்பித்தது திமுக, அதிமுகவினர் பணப்பட்டுவாடா செய்வதற்கு வசதியாக இருந்தது என்று பாமக இளைஞரணி செயலாளரும், தருமபுரி தொகுதி வேட்பாளருமான அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.
திண்டிவனத்திலுள்ள வாக்குச்சாவடியில் அன்புமணி ராமதாஸ் தனது வாக்கினை இன்று காலை பதிவு செய்தார். இதன்பிறகு நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு பொதுமக்கள் மத்தியில் எழுச்சி உள்ளது. எங்கள் கூட்டணி 35 தொகுதிகளில் வெற்றி பெறும். அதிமுகவினர் தேர்தலுக்கு முன்பு கடந்த 2 நாட்களாக பணப்பட்டுவாடாவில் ஈடுபட்டனர். இது குறித்து தேர்தல் ஆணையத்தில் புகார் கொடுத்தோம். ஆனால், தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை.
பணம் விநியோகத்தையும் மீறி பொதுமக்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர். மோடி பிரதமராக வேண்டும், இந்தியாவின் பொருளாதாரம் உயர வேண்டும், தமிழகத்தில் அதிமுக, திமுக இல்லாத மாற்று அணி உருவாக வேண்டும் என்ற அவர்களின் ஆர்வம் இந்தத் தேர்தலில் தெரிகிறது.
தேர்தல் ஆணையம் தமிழகத்தில் முதல்முறையாக 144 தடை உத்தரவு போட்டும், எந்தப் பயனும் இல்லை. ஆளுங்கட்சியினரும், திமுகவினரும் பணப் பட்டுவாடா செய்யத்தான் வசதியாக இருந்தது. இவ்வாறு அன்புமணி ராமதாஸ் கூறினார்.