குடும்ப ஆட்சிக்கு நாங்கள் முற்றுப்புள்ளி வைப்போம்: சீமான் பேச்சு
ஸ்ரீவைகுண்டம்: நாம் தமிழர் கட்சி வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும் பட்சத்தில் குடும்ப ஆட்சிக்கு நாங்கள் முற்றுப்புள்ளி வைப்போம் என ஸ்ரீவைகுண்டத்தில் சீமான் பேசியுள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று ஸ்ரீவைகுண்டம் பகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசுகையில், குடும்ப ஆட்சிக்கு நாங்கள் முற்றுப்புள்ளி வைப்போம் என்று கூறினார்.
மேலும் அவர் கூறுகையில், தமிழகத்தில் கடந்த 50 ஆண்டுகளாக குடும்ப ஆட்சிதான் நடந்து வருகிறது. தி.மு.க.வில் கருணாநிதி அவரது மகன் ஸ்டாலின், மகள் கனிமொழி ஆகியோரிடம் தான் முக்கிய பொறுப்புகள் அனைத்தும் உள்ளது.
இதே போல் அ.தி.மு.க.வில் ஜெயலலிதாவிற்கு அடுத்தாக சசிகலா குடும்பத்தினரின் ஆதிக்கமே அதிகமாக உள்ளது. தே.மு.தி.க.வில் விஜயகாந்த், பிரேமலதா, சுதீஷ் ஆகியோரிடம் முக்கிய பொறுப்புகள் உள்ளன.
வருகிற தேர்தலில் நாம் தமிழர் கட்சி வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும் பட்சத்தில் குடும்ப ஆட்சிக்கு நாங்கள் முற்றுப்புள்ளி வைப்போம். ஓட்டுக்கு பணம் வாங்கி வாக்களிப்பது கொடுமையானது. தி.மு..க., அ.தி.மு.க.வுக்கு வாக்களித்து அடிமைகளை உருவாக்க வேண்டாம்.
வருங்கால தலைமுறையினருக்காக நாம் தமிழர் கட்சி போராடி வருகிறது. புதிய அரசியல் பாதையில் அடியெடுத்து செல்லும் கட்சியாக நாங்கள் செயல்பட்டு வருகிறோம் என்றார். இவ்வாறு அவர் பேசினார்.