மூடநம்பிக்கையை தகர்த்த சீமான்...தேய்பிறை செவ்வாய்கிழமையில் கடலூரில் வேட்பு மனு தாக்கல்!
சென்னை: சட்டசபைத் தேர்தலில் கடலூர் தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் இன்று கடலூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் அலுவலர் உமா மகேஸ்வரியிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
தமிழக தேர்தல் களம் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. மே 16ம் தேதி நடைபெறும் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த வெள்ளிக்கிழமை 22ம் தேதி தொடங்கியது. சனி, ஞாயிறு விடுமுறைக்குப் பின்னர் முகூர்த்த தினமான நேற்று முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி, பாமகவின் அன்புமணி ஆகிய மூன்று முதல்வர் வேட்பாளர்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
சட்டசபைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து களமிறங்குகிறது. 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்து அனல் பறக்க பிரச்சாரம் செய்து வருகிறார் சீமான்.
இந்திய தேர்தல் வரலாற்றில் முதல் முறையாக ஒரே மேடையில் 234 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்தும், அறிமுகம் செய்து வைத்தும் பேசிய சீமான், கடலூர் தொகுதியில் தாம் போட்டியிடப்போவதாக அறிவித்தார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்டத்தில் பணியாற்றுவதற்காக போட்டியிடப்போவதாக கடந்த மாதம் கூறினார்.
இந்த நிலையில் தேய்பிறை செவ்வாய், சதுர்த்தி திதியான இன்று யாரும் வேட்புமனு தாக்கல் செய்ய முன்வராத நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் இன்று கடலூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் அதிகாரி உமா மகேஸ்வரியிடம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
27ம் தேதியான நாளை தேமுதிக தலைவர் விஜயகாந்த், திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் அவரவர்கள் போட்டியிடும் தொகுதிகளில் வேட்புமனுக்களை தாக்க செய்ய உள்ளனர்.
பணத்தை நம்பி நிற்கவில்லை
வேட்பு மனு தாக்கல் செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், அதிமுக, திமுக கட்சிகள் பணத்தை நம்பி நிற்பதாகவும், கொள்கைகள், மக்களுக்கு செய்யப்போகும் நன்மைகளை கூறி தாங்கள் வாக்கு சேகரிப்பதாகவும் தெரிவித்தார். 100 சதவிகித வாக்குப் பதிவிற்கு விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து வரும் தேர்தல் ஆணையம், வாக்காளர்களுக்கு அரசியல் கட்சியினர் பணம் கொடுப்பதை கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறினார்.