இந்தியா இந்துக்களின் நாடு அல்ல... தமிழர்களின் தேசம்: சீமான்
இந்தியா இந்துக்களின் நாடு என்பதை ஏற்க முடியாது என்கிறார் சீமான்.
Recommended Video
சென்னை: இந்தியா இந்துக்களின் நாடு அல்ல.. இமயம் முதல் குமரி வரை வாழ்ந்த தமிழர்களின் நாடு என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற கடவுள்-2 படத் துவக்க விழாவில் சீமான் பேசியதாவது:
ஆண்டாள் விவகாரத்தில் வைரமுத்து மீது தாக்குதல் நடத்தப்படவில்லை. தமிழ்த் தேசிய இனத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டு அச்சுறுத்தல் விடுக்கப்படுகிறது.
இந்தியா என்கிற நாடு யாருடையது? இந்தியா என் நாடு. பாரத நாடு என்பது பைந்தமிழர் நாடு என்கிறார் பாரதியார். இதை யாரும் மறுத்துவிட முடியாது.
அம்பேத்கர் கருத்து
சிந்து சமவெளி நாகரிகமே தமிழரின் தொன்ம நாகரிகம். இதை மறுப்பதற்கு யாரும் இல்லை. அரசியல் சாசனத்தை எழுதிய அம்பேத்கர், இது இந்துக்களின் நாடு என்பதை ஏற்க முடியாது. இந்த நிலப்பரப்பு முழுவதும் தமிழை தாய்மொழியாகக் கொண்ட நாகர்கள்தான் வாழ்ந்தார்கள். என்னுடைய மூதாதையர்களின் மொழி கூட தமிழ்தான் என்கிறார்.
இமயமலை வரை
இந்த நாட்டை என் நாடு என சொந்தம் கொண்டாடுவதற்கு ஒரே ஒரு இனத்துக்குதான் உரிமை உண்டு. அது தமிழ் இனத்துக்கு மட்டும்தான் என்கிறார் அம்பேத்கர். இமயத்தில் கொடியை நட்டான் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் என்றால் ஊரான் நாட்டில் நட்டு வர முடியாது. இமயமலையில் கல்லெடுத்து வந்து கண்ணகிக்கு சேரன் செங்குட்டுவன் கோவில் கட்டினான் என்றால் ஊரான் நாட்டில் கல்லெடுத்து வர முடியுமா?
புதிய மொழிகள்
இது என் நிலம். இமயம் வரை பரவி வாழ்ந்த தமிழர் சிறுகச் சிறுக மொழித் திரிபுகளால் இன்று கால் பகுதியில் நிற்கின்றனர். 1800 ஆண்டுகளுக்கு முன் என் தாய்மொழியோடு சமஸ்கிருதத்தை கலந்து பேசியதால் தெலுங்கு மொழி உருவானது. 1500 ஆண்டுகளுக்கு முன்னர் கன்னடம் உருவானது. அந்த மொழிகளில் பல சொற்கள் என்னுடைய மொழி சொற்கள். மொழித் திரிபில் பிறந்ததால் உயிர்ச்சொற்கள், வேர்ச் சொற்கள் அந்த மொழிகளுக்கு இல்லை.
மலையாளிகள் உருவாக்கம்
கேரளாவில் 15-ம் நூற்றாண்டில் மலையாளம் என்கிற மொழியே கிடையாது. சேர சோழ பாண்டியர்களின் மூத்த பாட்டன் சேரன் ஆண்ட நிலம்தான் கேரளம். அதில் வாழ்ந்த மக்கள்தான் மலையாளிகளாக நிற்கின்றனர். ஆங்கிலத்தை மொழிபெயர்த்து நீர்வீழ்ச்சி என்று நாம் வைத்துள்ளோம். மலையாளத்தில் தூய தமிழான அருவி என்றே வைத்துள்ளனர். மொகலாயர்களிம் பாரசீகத்துடன் சமஸ்கிருதம் கலந்து பேசியதால் இந்தி உருவானது. இந்தியாவில் உள்ள மொழிகளிலேயே மிக மிக பின்பு வந்த மொழி இந்தி.
மொழிகளின் தாய்மொழி தமிழ்
ஆனால் உலகத்திலேயே மிக மிக மூத்த மொழி தமிழ். எல்லோரும் அவரவர் தாய்மொழியில் பேசுகிறார்கள். நாங்கள் அந்த மொழிகளின் தாய்மொழியில் பேசுகிறோம். தமிழ் இல்லையென்றால் பல தேசிய இனங்களுக்கு மொழியே கிடையாது. செம்மொழிக்கு சான்றாக மலையாளிகள் காட்டுவது தொல்காப்பியத்தையும் சிலப்பதிகாரத்தையும்தான். ஏனெனில் சேர பாட்டன் இளங்கோவடிகள். அதனால் அவர்கள் நூல் என்கிறார்கள். 7-ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் ஆண்டாள். அந்த நூற்றாண்டில் இந்தியா ஏது? இந்து ஏது?
ஆங்கிலேயர்கள் உருவாக்கிய இந்தியா
வெள்ளைக்காரன் வரும்போது இந்தியா என்பதே இல்லையே. பிறகு எப்படி இந்தியா மீது படையெடுத்து வந்தான் என கூற முடியும்? வர்த்தகம் செய்ய வந்தவன் வெள்ளைக்காரன். அவன்தான் இந்தியா என்கிற நாட்டையே உருவாக்குகிறான். ஆனால் வரலாற்றை தவறாக கற்பிக்கிறார்கள்.
ஆண்டாள் காலத்தில் இந்தியா இல்லை
ஆண்டாள் எங்கள் குல மூதாதை. முன்னோர்...உங்களுக்கும் இதற்கும் என்ன தொடர்பு? வைரமுத்துவுக்கு இல்லாத அக்கறையும் பற்றும் மற்றவர்களுக்கு எங்கிருந்து வந்தது? எதுவும் உங்களால் கொண்டுவரப்படவில்லை. எங்களிடம் இருந்து எடுக்கப்பட்டவைதான் அனைத்தும்.
இவ்வாறு சீமான் கூறினார்.