உலகளவில் "செல்பி வித் டாட்டர்" ட்ரெண்டிங் ஆக்கிய பிரதமர் மோடி
டெல்லி: நாட்டில் பாலின விகித மாறுபாட்டை சரிசெய்வதற்காக, பெண் குழந்தைகளைக் காக்க வேண்டும் என்ற நோக்கத்தில் "செல்பி வித் டாட்டர்" என்ற பிரதமர் மோடியின் அழைப்புக்கு இணையத்தில் மகத்தான வரவேற்பு கிடைத்துள்ளது. பிரதமர் மோடி அழைப்பு விடுத்த சில மணிநேரங்களிலேயே ட்விட்டரில் "செல்பி வித் டாட்டர்" ஹேஷ்டேக் உலக அளவில் ட்ரெண்டிங் ஆகி கலக்கியது.
மனதின் குரல் என்ற தலைப்பில் பிரதமர் மோடி மாதந்தோறும் வானொலியில் உரையாற்றி வருகிறார். அதன் வரிசையில், அவரது உரை நாடு முழுவதும் நேற்று ஒலிபரப்பப்பட்டது.
அதில், நாட்டில் பெண் குழந்தைகளின் விகிதம் குறைந்து வருவது கவலையளிக்கிறது என்பதால், பெண் சிசுவைக் காப்பாற்ற அனைவரும் உறுதியேற்க வேண்டும் அவர் அழைப்பு விடுத்தார். அப்போது ஒவ்வொருவரும் தங்களது பெண் குழந்தைகளுடன் செல்பி எடுத்துக் கொள்ள வேண்டும் எனவும் கூறினார் பிரதமர் மோடி.
பெண் குழந்தைகளுடன் அப்பாக்கள் எடுத்துக்கொண்ட செல்ஃபிக்களை தமக்கு அனுப்பினால், அதனை டிவிட்டரில் வெளியிடுவதாகவும் பிரதமர் மோடி உறுதியளித்திருந்தார்.
இதையடுத்து நேற்று பிற்பகல் இந்தியாவில் முதலிடத்திலும் அதேநேரம் ட்விட்டரில் உலகளவிலும் #SelfieWithDaughter ட்ரெண்டிங்கில் இருந்ததாக பிரதமர் அலுவலகம் தெரிவித்தது. மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ், கிரண் பேடி என்று பல பிரபலங்கள் தங்கள் மகள்களுடனும் அப்பாக்களுடனும் செல்ஃபி எடுத்துக் கொண்டு அதை ட்விட்டரில் பிரதமருக்கு அனுப்பினர்.
A Selfie when there were no Selfies. When visionary parents nurtured their daughters. #Selfiewithdaughter @PMOIndia pic.twitter.com/bsbeq9lXIT
— Kiran Bedi (@thekiranbedi) June 28, 2015
திருமணமாகாத இளைஞர்கள் அக்கா, அண்ணன் என்று தங்கள் உடன் பிறந்தவர்களின் குழந்தைகளுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டு அதை ட்விட்டரில் #SelfieWithDaughter என்ற ஹேஷ்டேகுடன் பதிவேற்றும் அளவிற்கு பிரதமரால் "செல்பி வித் டாட்டர்" ட்விட்டரில் வைரலானது.