ஊழல் புகார்களை ரஜினிக்கும், கமலுக்கும் மக்கள் அனுப்ப வேண்டுமாம்.. எஸ்.வி.சேகருக்கு என்னாச்சு?
தமிழக மக்கள் அரசியல்வாதிகளின் ஊழல் தொடர்பான புகார்களை ரஜினிகாந்துக்கும், கமல் ஹாசனுக்கும் அனுப்ப வேண்டும் என்று நடிகர் எஸ்.வி.சேகர் கேட்டுக் கொண்டார்.
சென்னை: அரசியல்வாதிகள் செய்யும் முறைகேடுகள், ஊழல்களை புகார்களாக நடிகர்கள் ரஜினிகாந்துக்கும், கமல்ஹாசனுக்கும் அனுப்புங்கள் என்று நடிகர் எஸ்.வி.சேகர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சமீப காலமாக ரஜினி, கமல் இருவரில் யார் அரசியலுக்கு முதலில் வர போகிறார்கள் என்ற பேச்சு அடிப்பட்டு வருகிறது.இதில் கமல் இன்னும் ஒரு படி மேலே போய், தமிழகத்தில் அனைத்து துறையிலும் லஞ்சம், ஊழல் மலிந்துள்ளது என்று பகிரங்கமாக குற்றம்சாட்டினார்.
சினிமா துறையிலான ஊழல்களை தாம் எடுத்து சொல்வதாகவும், பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் நடைபெறும் ஊழல், முறைகேடுகளை அமைச்சர்களின் இணையதள முகவரிக்கு அனுப்புங்கள் என்றும் கமல் கேட்டுக் கொண்டார். இதற்கு நடிகர்கள், அரசியல்வாதிகள் என தங்கள் எதிர்ப்பையும், ஆதரவையும் அவ்வப்போது பதிவு செய்து வந்தனர்.
இணையதள முகவரி நீக்கம்
கமல் இவ்வாறு கூறிய அடுத்த நாளே தமிழக அரசு இணையதளத்தில் இருந்து அமைச்சர்களின் புகார் பகுதி நீக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் ஊழல் புகார்களை ரஜினிக்கும், கமலுக்கும் அனுப்புங்கள் என்று எஸ்.வி.சேகர் கேட்டுக் கொண்டுள்ளார்.
அமைச்சர்களை சென்றடையாது
இதுகுறித்து எஸ்வி சேகர் கூறுகையில், மக்கள் தங்கள் பகுதிகளில் நடைபெறும் ஊழல், முறைகேடுகளை சம்பந்தப்பட்ட அமைச்சர்களுக்கு அனுப்ப வேண்டும் என்று கமல் கேட்டுக் கொண்டார். ஆனால் அதுபோன்ற புகார்கள் ஏதும் அமைச்சர்களை சென்றடையாது. ஏனெனில் அரசு பின்பற்றும் நடைமுறை தவறானதாகும்.
கமலுக்கும், ரஜினிக்கும்
எனவே மக்களிடம் நான் ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன். உங்கள் புகார்களை ரஜினி, கமலின் இமெயில் முகவரிக்கு அனுப்புங்கள். அவர்கள் அதை ஆளுநருக்கு அனுப்ப வேண்டும். அப்போதுதான் அந்த புகார்களுக்கு மீது ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்படும்.
குழந்தைத்தனமானது
கமல் புகார் அனுப்ப கூறிய அடுத்த நாளே தங்கள் இணையதள முகவரி உள்ளிட்ட தொடர்பு விவரங்களை அமைச்சர்கள் நீக்கிவிட்டது சிறுபிள்ளைத்தனமானது. ஊழல் குறித்து எதிர்க்கட்சிகள் எல்லாம் குரல் கொடுத்து வரும் நிலையில் ஊழலை குறி வைத்து கமல் ஏன் பேசினார் என்பது எனக்கு வியப்பாகவே உள்ளது என்றார் எஸ்.வி.சேகர்.