கேட்டது பொருளாளர் பதவி.. யாருக்கு வேணும் அமைப்பு செயலர் போஸ்ட்... கொந்தளிக்கும் செங்கோட்டையன்
அதிமுக அமைப்புச் செயலராக தம்மை சசிகலா நியமித்ததில் அதிருப்தியில் இருக்கிறாராம் செங்கோட்டையன். அதிமுக பொருளாளர் பதவியே தமக்கு வேண்டும் என்பதில் செங்கோட்டையன் உறுதியாக இருக்கிறாராம்.
சென்னை: அதிமுகவில் முக்கியமான பொருளாளர் பதவியைத்தானே கேட்டேன்... பத்தோடு பதினொன்றாக அமைப்புச் செயலர் பதவியை தருவதா? என சசிகலாவுக்கு எதிராக கொந்தளிக்கிறாராம் முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன்.
ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் சசிகலா, அதிமுக பொதுச்செயலராக முயற்சித்த போது அதை எதிர்த்தவர் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன். ஆனால் மன்னார்குடி தரப்பு நிச்சயம் உங்களுக்கு கட்சியிலும் ஆட்சியிலும் உரிய மரியாதை தரப்படும் என கூறி செங்கோட்டையனை சமாதானப்படுத்தியது.

எதுவும் கிடைக்கவில்லை
இதனால் மதுசூதனன் உள்ளிட்டோருடன் சசிகலாவை பொதுச்செயலராக்க கோரி போயஸ் கார்டனில் வரிசை கட்டி நின்றார் செங்கோட்டையன். இருந்தபோதும் உறுதியளித்தபடி எந்த பதவியுமே செங்கோட்டையனுக்கு கிடைக்கவில்லை.

அமைப்புச் செயலர்
இந்த நிலையில் திடீரென அமைப்புச் செயலராக பலரை நியமித்தார் சசிகலா. அதில் செங்கோட்டையனும் ஒருவர். ஆனால் இந்த நியமனத்தில் கடுமையான அதிருப்தியில் இருக்கிறாராம் செங்கோட்டையன்.

கொந்தளிப்பு
தாம் கேட்டது அதிமுகவின் முக்கியமான பொருளாளர் பதவி; அதைத் தராமல் பத்தோடு பதினொன்றாக அமைப்புச் செயலர் பதவியை பிச்சை போல போடுவதாக என கொந்தளித்து போனாராம் செங்கோட்டையன். சசிகலா தரப்போ, முதல்வர் பதவியை ஓ. பன்னீர்செல்வத்திடம் இருந்து பறிக்கப் போகிறோம்; பொருளாளர் பதவியையும் அவரிடம் இருந்து பறித்தால் மோசமான விளைவுகள் ஏற்படும் என அச்சப்படுகிறதாம்.

பொன்னையன்
இதே பொருளாளர் பதவிக்காகத்தான் பொன்னையனும் முறுக்கிக் கொண்டிருக்கிறார். இதனால் அவர் அதிமுக நிகழ்ச்சிகளில் அதிகம் தலைகாட்டாமல் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications