அரசு பள்ளிகளில் அட்மிஷனுக்கு சிபாரிசு கேட்கும் காலம் வெகு தூரத்தில் இல்லீங்கோ.. செங்கோட்டையன்
அரசு பள்ளிகளில் அட்மிஷன் கிடைக்க சிபாரிசு கேட்கும் காலம் வெகு தூரத்தில் இல்லை என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
ஈரோடு: இன்னும் 6 மாதங்கள் கழித்து அரசு பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க போட்டா போட்டி போட்டு கொண்டு சிபாரிசு கேட்கும் காலம் வரும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொண்டார். அப்போது அவர் கூறுகையில், பள்ளிக் கல்வியின் தரம் உயர்த்த ஏராளமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
அரசு பள்ளிகளின் கல்வித் தரம் வெகுவிரைவில் உயர்த்தப்படும். தனியார் பள்ளிகளில் சேர்க்க சிபாரிசு கேட்பதை போல், தங்கள் பிள்ளைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க சிபாரிசு கேட்கும் காலம் இன்னும் 6 மாதங்களில் வரும்.
நீட் தேர்வை எதிர்கொள்ளும் அளவுக்கு அவர்களது கல்வித் தரம் உயரும். இதை கண்கூடாக மக்கள் காண்பர் என்றார்.
பள்ளிக் கல்வி துறையில் ஏராளமான மாற்றங்களை மேற்கொண்டு வருகிறது தமிழக அரசு. அந்த வகையில் 10-ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் ரேங்கிங் சிஸ்டமை ஒழித்து தனியார் பள்ளிகளின் கட்டணக் கொள்ளையை அரசு தடுத்தது.
மேலும் 11-ஆம் வகுப்பை பொது தேர்வாக அறிவித்தது. 12-ஆம் வகுப்பில் 600 மதிப்பெண்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படவுள்ளது. மேலும் 11, 12-ஆம் வகுப்பு ஆகிய மதிப்பெண்களின் சராசரியை வைத்து சான்றிதழ் வழங்கப்படவுள்ளது என்றார் செங்கோட்டையன்.