கூவத்தூரில் பதற்றம்: எடப்பாடி, செங்கோட்டையன் ஆதரவு எம்.எல்.ஏக்களிடையே மோதல் வெடிக்கும் அபாயம்!
கூவத்தூரில் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் செங்கோட்டையன் ஆதரவு எம்.எல்.ஏக்களிடையே மோதல் வெடிக்கும் அபாயம் உள்ளதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
சென்னை: கல்பாக்கத்தை அடுத்த கூவத்தூரில் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் செங்கோட்டையன் ஆதரவு அதிமுக எம்.எல்.ஏக்களிடையே மோதல் வெடிக்கும் அபாயம் இருப்பதால் பதற்றம் நிலவி வருகிறது.
அதிமுகவில் கொங்கு மண்டலத்தில் கோலோச்சிய முத்துசாமி, செங்கோட்டையன் தயவில்தான் நுழைந்தார் எடப்பாடி பழனிச்சாமி. மன்னார்குடி கும்பலுடன் கை கோர்த்த எடப்பாடி பழனிச்சாமிக்கு எல்லாமும் ஏறுமுகமானது.
அதேநேரத்தில் தம்மை உருவாக்கிய சீனியர் செங்கோட்டையனின் செல்வாக்கை ஒரேயடியாக சரித்தும் போடும் சதிகளிலும் வென்றார் எடப்பாடி பழனிச்சாமி. செங்கோட்டையன் எம்.எல்.ஏ.வாக இருந்தாலும் அமைச்சரவையில் அவருக்கு இடம் இல்லை.

செங்கோட்டையனுக்கு வாய்ப்பு
ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் செங்கோட்டையனுக்கு மன்னார்குடி கும்பல் முக்கியத்துவம் கொடுத்தது. அதிமுக அவைத் தலைவர் பதவியிலும் செங்கோட்டையனை அமர வைத்தது. ஒரு கட்டத்தில் சசிகலாவுக்கு பதிலாக செங்கோட்டையன் முதல்வராகலாம் எனவும் கூறப்பட்டது.

எடப்பாடி தேர்வு
இதை எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் சசிகலா தெரிவித்த போது, செங்கோட்டையனுக்கு எதிராக எடப்பாடி பழனிச்சாமி ஆதரவு எம்.எல்.ஏக்கள் குரல் கொடுத்துள்ளனர். இதையடுத்து எடப்பாடி பழனிச்சாமியை அதிமுக சட்டசபை கட்சித் தலைவராக தேர்வு செய்தனர்.

அடிதடி சூழல்
எடப்பாடி பழனிச்சாமி, அதிமுக சட்டசபை குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டது முதலே இருவரது ஆதரவு எம்.எல்.ஏக்களும் முறைத்து கொண்டுதான் இருக்கின்றனர். இது மெல்ல மெல்ல மோதலாக உருவெடுத்துள்ளதாம். கூவத்தூர் ரிசார்ட்டில் நேற்று இருதரப்பு எம்.எல்.ஏக்களும் அடிதடியில் இறங்கும் சூழல் உருவானதாம்.

பதற்றம் தொடருகிறது
இது தொடர்பாக அங்கிருந்த போலீசாரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது யாரேனும் வந்து புகார் கொடுக்கட்டும்; அதன் பின்னர் நடவடிக்கை எடுக்கிறோம் என கூறியுள்ளனர். எடப்பாடி- செங்கோட்டையன் ஆதரவு எம்.எல்.ஏக்களிடையே எப்போது வேண்டுமானாலும் மோதல் வெடிக்கும் என்பதால் கூவத்தூரில் பதற்றம் நிலவி வருகிறது.












Click it and Unblock the Notifications