விஜயபாஸ்கருக்கு எதிராக 20க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் போர்க்கொடி.. தினகரன் மீதும் கடும் அதிருப்தி
தினகரன் தரப்பில் நெருக்கடியை சந்தித்து வரும் அமைச்சர்கள், மற்றொருபக்கம், விஜயபாஸ்கரை பதவி நீக்கம் செய்ய கோரிக்கைவிடுத்து வருகிறார்கள்.
சென்னை: அமைச்சர் விஜய பாஸ்கர் மீதும், அவர் மீது நடவடிக்கை எடுக்க தயங்கும் அதிமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மீதும் சீனியர் அமைச்சர்கள் அதிருப்தியிலுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதிமுக பொதுச் செயலராக சசிகலா நியமிக்கப்பட்டதே செல்லாது என்று, கட்சியின் அடிப்படை விதிகளை மேற்கோள் காட்டி, பன்னீர்செல்வம் தரப்பினர், இந்திய தேர்தல் ஆணையத்தில் மனு கொடுத்துள்ளனர்.
அந்த மனு மீதான விசாரணையை துவங்குவதற்கு முன்பாக, ஆர்.கே.நகர் தேர்தலையொட்டி, இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டு, சசிகலா மற்றும் பன்னீர்செல்வம் தரப்பினருக்கு, தொப்பி மற்றும் இரட்டை மின் கம்பம் சின்னங்கள் ஒதுக்கப்பட்டன.
தேர்தல் ஆணையம்
இந்நிலையில், வரும் 17க்குள், சசிகலாவின் பொதுச் செயலாளர் நியமனம் மற்றும் இரட்டை இலை சம்பந்தமாக கூடுதல் தகவல்கள் எதுவும் இருந்தால், அதை, தலைமை தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிக்கலாம் எனவும், தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதையடுத்து, அதிமுகவின் இரண்டு தரப்பிலும், கூடுதல் ஆவணங்கள் மற்றும் பிரமாண பத்திரங்களை தேர்தல் கமிஷன் முன்பாக தாக்கல் செய்வதில் தீவிரமாக உள்ளன.
சசிகலா தரப்பு
அவர்களுக்கு ஈடாக, சசிகலா தரப்பும், கட்சியின் துணைப் பொதுச் செயலர் தினகரனின் உத்தரவின் பேரில், தமிழகம் முழுவதும், கிளைக் கழகம் மற்றும் ஒன்றியக் கழக நிர்வாகிகள் உள்ளிட்ட, கீழ் நிலையில் உள்ளவர்களிடமும், பிரமாண பத்திரங்களை வாங்கி வருகின்றனர்.
பணம் சப்ளை
இப்படி கையெழுத்து போட வேண்டும் என்றால் லட்சக்கணக்கில் பணம் தேவை என கிளைக் கழக நிர்வாகிகள் உள்ளிட்ட கட்சியின் அத்தனை நிர்வாகிகளும் டிடிவி தினகரனிடம் கேட்கத் தொடங்கியுள்ளனர். இந்த செலவு பொறுப்பை அமைச்சர்கள் தலையில் கட்டியுள்ளாராம், தினகரன். ஏற்கனவே ஐடி ரெய்டுகள் பயமுறுத்தும் நிலையில், பணத்தை வெளியே எடுத்து செலவிட அஞ்சிக் கிடக்கிறார்கள் அமைச்சர்கள்.
விஜயபாஸ்கரால் அதிருப்தி
இப்படி தினகரன் தரப்பில் நெருக்கடியை சந்தித்து வரும் அமைச்சர்கள், மற்றொருபக்கம், விஜயபாஸ்கரை பதவி நீக்கம் செய்ய கோரிக்கைவிடுத்து வருகிறார்கள். அதிலும் சீனியர் அமைச்சர்கள் பலரும் விஜய பாஸ்கரை நீக்கம் செய்ய போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். ஐடி ரெய்டுக்கு உள்ளானவரை அமைச்சராக நீடிக்க செய்வது கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்பது பல சீனியர் அமைச்சர்கள் கருத்தாக உள்ளது.
அமைச்சர்கள் குமுறல்
இந்நிலையிலும், விஜயபாஸ்கரை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்போவதில்லை என்று டிடிவி தினகரன் இரு தினங்கள் முன்பு பேட்டியளித்தார். இதனால் அதிருப்தியடைந்த அமைச்சர்கள், தங்கமணி, வேலுமணி ஆகியோர் நேற்று சீனியர் நிர்வாகியான லோக்சபா துணை தலைவர் தம்பிதுரையை சந்தித்து பிரச்சினையை எடுத்து கூறினர்.
ஆலோசனை
இதையடுத்து இன்று தினகரனை தம்பிதுரை சந்தித்து நிலவரத்தை எடுத்து கூறினார். சுமார் 20 சீனியர் அமைச்சர்கள் அரசுக்கு எதிராக வெடித்து கிளம்ப தயாராக இருப்பதாக வெளியான தகவலை தொடர்ந்து, உளவுத்துறை அவர்களை கண்காணித்து வருவதையும், இந்த ஆலோசனையின்போது விவரமாக பேசியுள்ளனர். அமைச்சர்களின் கோபத்தால் கட்சி உடைவதை தவிர்க்க விஜயபாஸ்கரை நீக்குவதை தவிர வேறு வழியில்லை என்று இந்த ஆலோசனையின்போது முடிவெடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.