பொதுக்குழுவைக் கூட்ட ஃபோர்ஜரி செய்கிறார் எடப்பாடி பழனிச்சாமி - தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ குற்றச்சாட்டு
அதிமுக பொதுக்குழுவைக் கூட்ட எடப்பாடி பழனிச்சாமி அணியினர் மோசடி வேலைகளில் ஈடுபடுகிறார்கள் என தினகரன் ஆதரவாளர் செந்தமிழன் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை: பொதுக்குழுவைக் கூட்டுவதற்காக எடப்பாடி அணியினர் மோசடி வேலைகளில் ஈடுபடுகின்றனர் என தினகரன் ஆதரவாளரும் முன்னாள் அமைச்சருமான சைதை ஜி. செந்தமிழன் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சைதை ஜி.செந்தமிழன், ''அதிமுக பொதுக்குழுவைக் கூட்டும் அதிகாரம் பொதுச்செயலாளருக்கு மட்டுமே உள்ளது என அதிமுக கட்சி விதியில் கூறப்பட்டுள்ளது.

அதிமுக நிர்வாகிகளில் 5-ல் ஒரு பங்கு நிர்வாகிகள் பொதுக்குழுவைக் கூட்ட கோரிக்கை விடுக்க வேண்டும். அந்தக் கோரிக்கையை பொதுச்செயலாளர் ஏற்றுக்கொண்டால் மட்டுமே கூட்டம் நடைபெறும் என்பது விதி.
ஆனால், எடப்பாடி அணியினர் பொதுக்குழு கூட்டுவதாக முன்பே தகவல் தெரிவித்துவிட்டு தற்போது நிர்வாகிகளிடம் முன் தேதியிட்ட கடிதத்த்தில் பொதுக்குழுவைக் கூட்ட கோரிக்கை விடுப்பது போல் கையெழுத்து வாங்கி மோசடி வேலை செய்கின்றனர். ஆகையால், இவர்கள் கூட்டும் பொதுக்குழு ஏமாற்று வேலை. ஆகையால் தான் நாங்கள் நீதி கேட்டு நீதிமன்றம் சென்றுள்ளோம்.
எங்கள் தரப்பிலிருந்து ஜக்கையன் எம்.எல்.ஏ அணி மாறியிருந்தாலும் கருணாஸ் எங்கள் பக்கம் வந்துவிட்டார். இன்னும் எம்.எல்.ஏக்கள் வருவார்கள்.
மேலும், தினகரன் மக்கள் பிரச்சனைகளைத் தீர்ப்பதில் முனைப்புடனும் வேகமாகவும் செயல்படுகிறார் என்று கூறியுள்ளார்.
ஏற்கனவே எடப்பாடி பழனிச்சாமியை 420 என்று கூறியிருந்தார் டிடிவி தினகரன் தற்போது அவரது ஆதரவாளர் ஒருவர் முதல்வர் ஃபோர்ஜரி செய்வதாக கூறியள்ளார்.












Click it and Unblock the Notifications