சங்கரைக் கொல்ல வேண்டும்.. மாமனார் போட்டுக் கொடுத்த திட்டம்.. சாதிக்காக கொன்ற கும்பல்!
உடுமலைப்பேட்டை: திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் தலித் இளைஞர் சங்கர் படுகொலை வழக்கில் அவரது மனைவி கவுசல்யாவின் புகாரின் பேரில் மொத்தம் 9 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அதில் 5 பேர் இதுவரை கைதாகியுள்ளனர். மற்றவர்களைப் போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
கலப்புத் திருமணம் செய்த தலித் இளைஞர் சங்கர், கவுசல்யா தம்பதி, உடுமலைப்பேட்டையில் கடைக்குப் போய்க் கொண்டிருந்த சமயத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று 3 பேர் கொண்ட கும்பலால் சரமாரியாக வெட்டப்பட்டனர். அதில் சங்கர் பரிதாபமாக உயிரிழந்தார். கவுசல்யா காயமடைந்தார்.
இச்சம்பவம் குறித்து உடுமலைப்பேட்டை போலீசில் கவுசல்யா புகார் கொடுத்தார். அதில் தனது தந்தை சின்னசாமி, தாயார் அன்னலட்சுமி, தாய்மாமா பாண்டித்துரை ஆகியோருடைய தூண்டுதலின் பேரில் சங்கர் கொல்லப்பட்டதாக தெரிவித்து இருந்தார். அதன் பேரில் உடுமலை போலீசார் இவர்கள் உள்பட 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
கொலையாளிகளை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இதனிடையே கவுசல்யாவின் தந்தை சின்னசாமி, நிலக்கோட்டை கோர்ட்டில் 14ம் தேதி சரணடைந்தார்.
சாதிப் பாசத்தால்
மேலும் தனிப்படை போலீஸாரின் தீவிர வேட்டையில் கொலையில் ஈடுபட்ட திண்டுக்கல் ஜெகதீசன் (31), மைக்கேல் என்கிற மதன் (25), செல்வகுமார் (25), பழனி மணிகண்டன் (25), இவர்கள் தங்குவதற்கு அடைக்கலம் கொடுத்த மணிகண்டன் (39) ஆகிய 5 பேரை கைது செய்தனர். இதில் ஜெகதீசன், மணிகண்டன், மதன் ஆகியோர் மீது ஏற்கனவே கொலை வழக்குகள் உள்ளது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. சாதிப் பாசத்தால் இவர்கள் கொலையாளிகளாக மாறியுள்ளனர்.
கொலைத் திட்டம்
இவர்களிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளன. அதாவது சின்னசாமி பழனியில் சொந்தமாக டிராவல்ஸ் நிறுவனம் வைத்துள்ளார். அங்கு டிரைவராக இருப்பவர் திண்டுக்கல் மாவட்டம் பாலகிருஷ்ணாபுரம் ஆசாரி தெருவை சேர்ந்த ஜெகதீசன். இருவரும் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள். மேலும் தொழில் சம்பந்தமாகவும் நெருங்கிப் பழகி வந்தனர்.
மகளால் அவமானம்
அவரிடம் தனது மகள் காதல் திருமணம் செய்து கொண்டது குறித்து ஜெகதீசனிடம் கூறிப் புலம்பியுள்ளார் சின்னச்சாமி. மறுபக்கம் மகளைப் பிரித்து வரவும் முயற்சி செய்து வந்தார்.
கொலை செய்ய
இதனால் மனம் உடைந்த நிலையில் இருந்த சின்னச்சாமி தனது மருமகனைத் தீர்த்துக் கட்டினால்தான் சரியாக வரும் என்று ஜெகதீசனிடம் கூறியுள்ளார். அவரும் சம்மதித்துள்ளார். இதையடுத்து தனது நண்பர்களுடன் ஆலோசனை நடத்தினார் ஜெகதீசன். சங்கரின் நடமாட்டத்தை இந்தக் கும்பல் நோட்டமிட்டு வந்தது.
தகவல் கொடுத்த தன்ராஜ்
சங்கரன் நடமாட்டத்தைக் கண்காணித்து வந்தவர் தன்ராஜ் என்பவர். அவர் கொடுத்த தகவலின் பேரில்தான் சம்பவத்தன்று கொலைக் கும்பல் அங்கு போய் சங்கரை வெட்டிக் கொன்றது.
3 பேர் தலைமறைவு
தற்போது இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 9 பேரில் 5 பேர் கைதாகி விட்டனர். சின்னச்சாமி சரணடைந்து விட்டார். தாயார் அன்னலட்சுமி, தாய்மாமா பாண்டித்துரை, தன்ராஜ் ஆகியோர் தலைமறைவாக உள்ளனர். அவர்களையும் பிடிக்க போலீஸர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.