சுவாதி கொலை: போலீஸ் விசாரணை முடிந்து ராம்குமார் மீண்டும் புழல் சிறையில் அடைப்பு
சென்னை: காதலை சொன்ன போது கன்னத்தில் அறைந்தாள்... கறுப்பு நாய் என்று என்னை பலர் முன்னிலையில் திட்டினாள்... எனக்கு கோபம் வந்தது அவளை கொலை செய்தேன் என்று சுவாதி கொலையில் கைது செய்யப்பட்டுள்ள ராம்குமார் போலீசில் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
3 நாள் போலீஸ் காவல் முடிந்ததை அடுத்து எழும்பூர் நீதிமன்றத்தில் ராம்குமார் ஆஜர்படுத்தப்பட்டார். ராம்குமாரை புழல் சிறையில் அடைக்க உத்தரவிட்ட நீதிபதி கோபிநாத், வரும் 18ம் தேதி ராம்குமாரை மீண்டும் ஆஜர்படுத்த வேண்டும் என்று தனது உத்தரவில் தெரிவித்தார்.
சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இளம்பெண் சுவாதி, 24 கடந்த ஜூன் 24ம் தேதி காலையில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் செங்கோட்டை அடுத்த டி.மீனாட்சிபுரத்தை சேர்ந்த ராம்குமார்,24 கடந்த 1ம் தேதி கைது செய்யப்பட்டார்.
ராம்குமாரை கைது செய்ய முயன்றபோது பிளேடால் கழுத்தை அறுத்துக்கொண்டு அவர் தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. அவரை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் போலீசார் சேர்த்தனர். பின்னர் சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்கப்பட்டு, 15 நாள் நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
3 நாள் போலீஸ் காவல்
ராம்குமாரை 3 நாட்களுக்கு போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க எழும்பூர் நீதிமன்றம் அனுமதி அளித்தது. இதையடுத்து, 13ம் தேதி மாலை முதல் ராம்குமாரிடம் நுங்கம்பாக்கம் உதவி ஆணையர் தேவராஜ் தலைமையிலான போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
ராம்குமாரை பார்க்க ஆவல்
நுங்கம்பாக்கம் காவல் நிலையத்திற்கு ராம்குமாரை அழைத்து வந்த போது ஊடகவியலாளர்கள் மட்டுமல்லாது பொதுமக்களும் ராம்குமாரை பார்க்க ஆவலுடன் வந்தனர். ஆனால் போலீசார் யாரையும் அனுமதிக்கவில்லை. தப்பு யார் பேர்லன்னு தெரியலை. அவளும் சின்னப்பொண்ணு இவனும் சின்னப்பையன் யார் சொல்றது உண்மைன்னு தெரியலை என்கின்றனர் பொதுமக்கள்.
முக்கிய தகவல்கள்
கடந்த இரண்டு நாட்களாக ராம்குமாரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளதாம். 3 மாதங்களுக்குள் சுவாதியுடன் பழகி அவளை கொலை செய்தது எப்படி என்று போலீசார் கேட்டதற்கு பல மாதங்களுக்கு முன்பே அடிக்கடி சென்னை வந்து சூளைமேட்டில் தங்கியிருக்கிறேன். அப்போதே சுவாதியை தெரியும் என்று கூறினாராம் ராம்குமார்.
ஆந்திரா சென்றது ஏன்?
சுவாதியுடன் பழக்கம் ஏற்பட்டது எப்படி? அவரை கொலை செய்ய வேறு யாராவது உதவி செய்தார்களா? என்பது போன்ற பல கேள்விகளை ராம்குமாரிடம் கேட்டுள்ளனர். சுவாதி கொலைக்கு முன்பு, 20, 21ம் தேதி களில் ராம்குமார் ஆந்திர மாநிலம் சென்று வந்துள்ளார். அங்கு சென்று வந்தது ஏன்? கொலை செய்யச் சொல்லி வேறு யாரும் தூண்டி னார்களா? என்றும் ராம்குமாரிடம் போலீசார் கேட்டதாக தெரிகிறது.
நான்தான் கொன்றேன்
விசாரணைக்குப் பிறகு, ‘கொலையை நான்தான் செய்தேன்' என்று ராம்குமார் ஒப்புக்கொண்ட தாகவும், அவரது வாக்குமூலத்தில் அது தெளிவாக இருப்பதாகவும் போலீஸ் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. சுவாதியிடம் காதலை சொன்ன போது கன்னத்தில் அறைந்ததாகவும், கறுப்பு நாயே கண்ணாடியில உன் முகத்தை பார்த்திருக்கியா என்று கேட்டதாகவும் அதுவே தனக்கு கோபத்தை ஏற்படுத்தியதாகவும் ராம்குமார் தனது வாக்குமூலத்தில் கூறியுள்ளாராம்.
வாக்குமூலம் பதிவு
நேரில் நடித்துக் காட்டுவதற்காக நுங்கம்பாக்கம் காவல் நிலையத்துக்கு அவரை போலீஸார் நேற்று காலை அழைத்து வந்தனர். மேஜை முன்பாக இருந்த சேரில் அவரை உட்கார வைத்து, உதவி ஆணையர் தேவராஜ் மற்றும் போலீஸார் விசாரணை நடத்தினராம். ராம்குமார் வாக்குமூலம் கொடுக்கும்போது அதை ரிக்கார்டு செய்து வைத்திருக்கிறோம். யாருடைய வற்புறுத்தலும் இல்லாமல் அவரே கொடுத்த வாக்குமூலம் அது என்றும் போலீஸ் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
சுவாதி நண்பரிடம் 10 மணிநேரம் விசாரணை
சுவாதி பற்றிய பல தகவல்கள் அவரது நண்பர் பிலால் மாலிக்குக்கு தெரிவதால், அவரிடமும் 10 மணிநேரம் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். ராம்குமார் கூறும் தகவல்களை பிலால் மாலிக்கிடம் கேட்டு, அதுபற்றி சுவாதி அவரிடம் ஏதாவது கூறியிருக்கிறாரா என்று போலீசார் விசாரித்தனராம்.
இன்றும் விசாரணை
சுவாதி கொலை நடந்த நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்துக்கு ராம் குமாரை நேரில் அழைத்துச் சென்று, கொலை செய்தது எப்படி என்று நடித்துக் காட்டுவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்தன. ஆனால் செய்தியாளர்கள் அதிக அளவில் கூடியதால், அந்த திட்டத்தை போலீஸார் ஒத்திப்போட்டனர். அவர் தங்கியிருந்த மேன்ஷனுக்கும் அழைத்துச் சென்று விசாரணை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
போலீஸ் காவல் முடிந்தது
ராம்குமாருக்கு வழங்கப்பட்ட 3 நாள் போலீஸ் காவல் இன்றுடன் முடிந்தது. இதனையடுத்து நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் அவருக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்றது. இதனையடுத்து எழும்பூர் நீதிமன்றத்தில் பிற்பகலில் ராம்குமாரை போலீசார் ஆஜர்படுத்தினர்.
புழலில் அடைக்க உத்தரவு
ராம்குமாரை புழல் சிறையில் அடைக்க எழும்பூர் நீதிமன்ற நீதிபதி கோபிநாத் உத்தரவிட்டார். வரும் 18ம் தேதி ராம்குமாரை மீண்டும் ஆஜர்படுத்த வேண்டும் என்றும் எழுப்பூர் நீதிமன்ற நீதிபதி கோபிநாத் தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.
அனுமதி மறுப்பு
எழும்பூர் நீதிமன்றத்தில் ராம்குமார் ஆஜர்படுத்தப்பட்டதை ஒட்டி செய்தியாளர்களுக்கு செய்தி சேகரிக்க போலீசார் அனுமதிக்கவில்லை. போலீஸ் விசாரணையில் ராம்குமார் கொடுத்துள்ள வாக்குமூலத்தை வைத்து பார்த்தால் தண்டனையில் இருந்து ராம்குமார் தப்பவே முடியாது என்கிறது போலீஸ் தரப்பு.