ஆபாசப் பட சிவராஜின் நாய் கடித்து 3 பேர் படுகாயம்.. பாலக்கோட்டில் இன்னொரு பரபரப்பு!
பாலக்கோடு: தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு நகரில், பெண்களை தவறாகப் பயன்படுத்தி அதை வீடியோவில் படமாக்கி சிக்கி கைதாகி சிறைக்குப் போயுள்ள நிதி நிறுவன அதிபர் சிவராஜ், வளர்த்து வந்த நாய் கடித்து 3 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதனால் பாலக்கோட்டில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பாலக்கோடு மந்தைவெளி பகுதியைச் சேர்ந்த சிவராஜ், தனது நிதி நிறுவனத்தில் வட்டிக்குக் கடன் வாங்கிய பெண்களை குறி வைத்து வேட்டையாடி வந்தார். அவர்களை தனது பண்ணை இல்லத்திற்குக் கூட்டிச் சென்று உல்லாசமாக இருந்து அதை வீடியோவிலும் பதிவு செய்து தனது செல்போனில் வைத்திருந்தார்.
இந்த விவகாரத்தில் அவர் கைது செய்யப்பட்டார். சமீபத்தில் அவரது தந்தை மரணமடைந்ததைத் தொடர்ந்து தற்போது 3 நாள் பரோலில் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், குப்பன் கொட்டாய் கிராமத்தில் உள்ள அவரது பண்ணை வீட்டில் ஒரு உயர் ரக நாயை வளர்த்து வந்தார் சிவராஜ். அந்த நாயை சிலர் அவிழ்த்து விட்டு விட்டனர் போலும். இதனால் வெளியில் வந்த நாய் அங்கு வேலை பார்த்துக் கொண்டிருந்த 80 வயது பாட்டி காவேரியம்மாளை கடுமையாக கடித்துக் குதறி விட்டது. அவரைக் காப்பாற்ற ஓடி வந்த மகள் பழனியம்மாளையும் நாய் கடித்தது. மேலும், பழனி என்பவரையும் கடித்தது. இதில் 3 பேரும் படுகாயமடைந்தனர்.
அவர்களை தற்போது தர்மபுரி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். சிவராஜால் பட்ட பாடு போதாது என்று அவரது நாய் வேறு 3 பேரைக் கடித்து விட்டதால் ஊரெங்கும் பரபரப்பாக உள்ளது.